தடையை உடைத்தெறிந்து மெக்சிக்கோவிற்குள் நுழைந்த அகதிகளால் பரபரப்பு
13 Apr,2019
கௌதமாலாவிலிருந்து மெக்சிக்கோ நோக்கிச் சென்ற சுமார் 2500 அகதிகளில் 350 பேர் தடுப்பு எல்லைக்கதவை உடைத்துக்கொண்டு மெக்சிக்கோவிற்குள் நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கௌதமாலாவிலிருந்து சுமார் 2500 அகதிகள் நேற்று அதிகாலை மெக்சிகோவிற்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் அவர்களை நாட்டிற்குள் செல்லவிடாமல் மெக்சிக்கோ எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். குறித்த எல்லைக் கதவு மூடப்பட்டதையடுத்து ஆத்திரமடைந்த அகதிகளில் சிலர் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தனர்.
மெக்சிக்கோவிற்குள் நுழைந்த சுமார் 350 பேரை பொலிஸார் தடுத்ததால் கடும் வன்முறையில் ஈடுபட்டனர்.
தெற்கு நகரமான மெடாபா டி டாமிங்கஸ் நகரில் உள்ள ஒரு பொலிஸ் நிலையத்தை அகதிகள் தாக்கினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து மெக்சிக்கோவின் எல்லையில் மேலதிக பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில், அகதிகளின் உள்வருகை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, மெக்சிக்கோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக வெளிநாட்டினர் அகதிகளாக ஊடுருவி வருகின்றனர்.
மத்திய அமெரிக்க கண்டத்தில் உள்ள ஹோண்டுராஸ், கௌதமாலா மற்றும் எல் சால்வடோர் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களே மெக்சிக்கோ வழியாக அமெரிக்காவிற்குள் நுழைகின்றனர்.
இதை தடுக்கும் முகமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பெரும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், அமெரிக்காவுக்குள் வெளிநாட்டினர் ஊடுருவதை மெக்சிக்கோ தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் மெக்சிக்கோ எல்லை முழுவதையும் மூடி விடுவோம் என்று டிரம்ப் எச்சரித்திருந்தார். இதையடுத்து மெக்சிக்கோ எல்லையில் தடுப்பு சுவர் கட்டவும் ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.