எல்லையில் தடுப்பு சுவர் கட்டி முடிப்போம், அல்லது எல்லைகளை மூடுவோம் – ட்ரம்ப் எச்சரிக்கை
28 Dec,2018
அமெரிக்க – மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்டி முடிப்போம் அல்லது நாம் எல்லைகளை மூடுகிறோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்தோடு நம் நாட்டின் பல நிறுவனங்கள் மற்றும் வேலைகளை மெக்ஸிக்கோவிற்கு மிகவும் முட்டாள்தனமாக வழங்குவதற்கு முன்னர், முந்தைய NAFTA க்குச் செல்லுங்கள் என அவர் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றம் அவசரமாக கூடியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், அங்கு அரசின் நிர்வாக முடக்கம் ஏழாவது நாளாக தொடர்கிறது.
மெக்சிகோவின் எல்லையில் அகதிகள் அமெரிக்காவில் நுழைவதை தடுக்கும் வகையில், சுவர் அமைக்கப்படும் என்று தேர்தலின் போது ஜனாதிபதி ட்ரம்ப் வாக்குறுதி வழங்கியிருந்தார்.
அதன்படி எல்லையில் தடுப்பு சுவர் கட்டுவதற்காக உள்நாட்டு நிதி 5 மில்லியன் டொலர் வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நாடாளுமன்றத்தில் கேட்டுக்கொண்டார்.
ஆனால், நாடாளுமன்றத்தில் இதற்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி எதிர்ப்பு தெரிவித்ததால், செனட் சபையில் இந்த நிதி சட்டமூலத்திற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை.
இதன் காரணமாக ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த அரசு அலுவலங்களின் செலவினங்களுக்கான நிதி சட்டமூலம் டிசம்பர் 21 ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது.
மேலும் மத்திய அரசு அலுவலங்களுக்கான செலவின நிதி மசோதாவும் நிறைவேற்றப்படாததால், கடந்த சனிக்கிழமை அரச அலுவலகங்கள் மூடப்பட்டன. இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற கூட்டம் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அரசின் முடக்கத்தால் இதுவரை எந்த வித முக்கிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், புத்தாண்டிலும் அரசு நிர்வாகம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் இந்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.