ரஷ்யாவுக்கு சொந்தமான நீர்மூழ்கிகப்பலிலிருந்து 4 ஏவுகணைகள் சோதனை
24 May,2018
ரஷ்யாவில் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஏவுகணைகள் நீருக்குள்ளிருந்து இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த காட்சி வெளியாகியுள்ளன.ரஷ்யாவுக்கு சொந்தமான நீர்மூழ்கிகப்பலிலிருந்து 4 ஏவுகணைகள் சோதனை செய்யப்பட்டது.
ரஷ்ய நீர்மூழ்கியான யூரி டோலோர்குகியிலிருந்து அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட Bulava ரக ஏவுகணைகள் அடுத்தடுத்து ஏவப்பட்டன. வெண்கடல் பகுதியில் நடந்ததாக கூறப்படும் இந்த ஏவுகணை சோதனையின் வீடியோ காட்சியை ரஷ்ய பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ளது.
8,000 கிலோமீட்டர் பரப்பளவில் இந்த ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீருக்குள்ளிருந்து அடுத்தடுத்து 4 ஏவுகணைகளை சோதனை செய்வது இதுவே முதன்முறை என கூறப்படுகிறது. இதனால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன. குறிப்பாக ரஷ்யாவுடன் பனிப்போர் நடத்திவரும் அமெரிக்காவில் இந்த ஏவுகணை சோதனை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில், இதற்கு முந்தைய அதிநவீன ஹைப்பர்சானிக் ஏவுகணை சோதனை முழு வெற்றி பெற்றுள்ளது. அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட இந்த ஏவுகணையை எந்தவொரு ஏவுகணை தடுப்பு அரணாலும் தடுத்து நிறுத்த முடியாது என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்தார். ஹைப்பர்சானிக் ஏவுகணை சீறிப் பாயும் அனிமேஷன் வீடியோ வெளியிடப்பட்டபோது, அந்த வீடியோவில் அமெரிக்காவின் புளோரிடோ மாகாணத்தை ஏவுகணை தாக்குவதாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்க அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் கூறியதாவது, நாட்டின் பாதுகாப்பு விவகாரத்தில் எவ்வித சமரசத்துக்கும் இடமில்லை, ரஷ்யாவின் எத்தகைய அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என கூறியது குறிப்பிடத்தக்கது.