இன்னும் 10 ஆண்டுகளில் பேட்டரியில் இயங்கும் பயணிகள் விமானம் தயாரிப்பு
01 Oct,2017
:
விமானங்கள் பெட்ரோல் மூலம் இயங்குகின்றன. இதனால் மிக அதிக செலவாகிறது. எனவே மாற்று எரிபொருளை பயன்படுத்தி இயக்கும் நடவடிக்கையில் லுப்தான்சா, ஏர்பிரான்ஸ்-கே.எல்.எம் மற்றும் விர்ஜின் அட்லாண்டிக் விமான நிலையங்கள் ஈடுபட்டு வருகின்றன.
கடந்த 2015-ம் ஆண்டில் ஏர்பஸ் விமானம் பேட்டரிகள் மூலம் இயங்கும் எலக்ட்ரிக் விமானம் ஆக மாற்றப்பட்டது. ஆனால் அது 2 பேர் மட்டுமே பயணம் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டது.
இந்த விமானங்களை வியாபார ரீதியில் அதிகம் பேர் பயணம் செய்யும் வகையில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கையில் இங்கிலாந்தின் ஈ.சி.ஜெட் விமான நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
கடந்த ஆண்டு அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் ரைட் எலக்ட்ரிக் நிறுவனத்தின் என்ஜினீயர்கள், பேட்டரி நிபுணர்கள் இணைந்து இத்தகைய முயற்சியில் இறங்கினர். அதன் விளைவாக 2 இருக்கைகளுடன் கூடிய பேட்டரியில் இயங்கும் எலக்ட்ரிக் விமானம் தயாரிக்கப்பட்டு சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. 335 மைல் அதாவது 540 கி.மீட்டர் தூரம் பறந்தது.
அதன் அடிப்படையில் பெரிய அளவில் விமானம் தயாரித்து பயன்பாட்டில் விட திட்டமிடப்பட்டுள்ளது. இத்தகையை விமானம் இன்னும் 10 ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேட்டரியில் இயங்கும் எலக்ட்ரிக் விமானங்கள் தயாரிப்பதன் மூலம் எரிபொருள் சேமிக்கப்படுகிறது. மேலும் பலத்த ஒலி வெளியாகாது என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.