சுமந்திரனால் அழிவடையும் கூட்டமைப்பு இம்முறை படுதோல்வியை சந்திக்கும் - கருணா
20 Jun,2020
எப்போது சுமந்திரன் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் புகுந்தாரோ அன்றோடு கூட்டமைப்பு அழிவை எதிர்நோக்கியது.
இவ்வாறு தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சரும் திகாமடுல்லை (அம்பாறை) மாவட்ட வேட்பாளருமான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
பொத்துவில் ஊறணி எனுமிடத்தில் தேர்தல் பரப்புரையில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்:
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை உருவாக்கியது நானே. யுத்தம் நடைபெறுகையில் பாராளுமன்றில் தமிழர்களின் குரல் ஒலிக்கவேண்டும் என சிவராம் கூறியதற்கிணங்க தலைவரிடம் கூறி நானே த.தே.கூட்டமைப்பை உருவாக்கினேன்.
வடக்கு கிழக்கில் இம்முறை த.தே.கூட்டமைப்பு படுதோல்வியைச் சந்திக்கும். கொழும்பை மையமாக வைத்தியங்கும் சுமந்திரன் ரணிலின் முகவர். தமிழர்களை விற்றவர். வடக்கு கிழக்கை அவருக்கு தெரியாது. இன்று போராளிகளை கொச்சைப்படுத்துகிறார். யாழ். மக்கள் அவருக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள்.
அன்று அக்கட்சியில் இருந்தவர்கள் நல்லவர்கள் வல்லவர்கள். இன்று அத்தனை பேரும் கள்வர்கள். தமிழர்களை விற்று பணம் சம்பாதித்தவர்கள்.
அம்பாறை மாவட்டத்தில் ஒரு முகவர். அவருக்குள்ள வர்த்தகம் பூராக முஸ்லிம்களுடன். கஞ்சிகுடிச்சாற்றில் வெட்டும் எமது மரங்களை அவர்களுக்கு விற்பது,மலையை உடைத்து அவர்களுக்கு விற்று கமிசன் உழைக்கிறார். ஒப்பந்தமே அவரது வேலை. மக்களுக்கு செய்தது ஒன்றுமில்லை.
முதன் முதலில் கப்பலோட்டியவன் தமிழன். எமது சின்னம் கப்பல். அன்று வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்கா வரை கப்பலோட்டியவன் தமிழன். நாம் இன்று அம்பாறையில் கப்பலோட்டுவோம். இளைஞர்கள் ஒன்று திரண்டுள்ளனர். மகிழ்ச்சி.
மஹிந்த தேசியப்பட்டியலூடாக எம்.பி. தருவதாகக் கூறினார். நான் மறுத்தேன். தேர்தல் மூலமாக எம்பியாகி எமது அம்பாறை தமிழ்மக்களுக்கு சிறந்த சேவையாற்ற பல திட்டங்களை வகுத்துள்ளேன்.
அன்று என்னை மட்டக்களப்பிற்கும் அம்பாறைக்கு பியசேனவையும் மஹிந்த நியமித்தார்கள். நான் மட்டக்களப்பில் பல கோடிருபா பெறுமதியான வேலைகளை செய்தேன். பாசிக்குடா அபிவிருத்தி கல்லடிப்பாலம் பிரண்டிக்ஸ் நிறுவனம் இப்படிப் பல .இன்று பிரண்டிக்ஸில் 7,000 தமிழ் யுவதிகள் வேலை செய்கிறார்கள். அதேபோல் இங்கும் செய்வேன். மாற்றத்திற்காக ஒன்றுபடுங்கள். என்றார்
போரை விரைந்து முடிக்க கருணாவே காரணம் - உண்மையை வெளிப்படுத்தும் மகிந்த அணி
“தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான இரகசியத் தகவல்களை கருணா வழங்கியதன் காரணமாகவே போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர முடிந்தது."
இவ்வாறு மஹிந்த அணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் கடற்படைத் தளபதியுமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில்அவர் மேலும் தெரிவித்ததாவது
"போர்க்காலத்தில் இரண்டு தரப்பிலும் படையினர் கொல்லப்பட்டார்கள். இராணுவத்தினரால் விடுதலைப்புலிகள் அமைப்பினர் போர்க்களத்தில் கொல்லப்பட்டார்கள். இராணுவத்தினருக்கு எதிராகவும் விடுதலைப்புலிகள் அமைப்பினர் பல்வேறு வழிமுறைகள் ஊடாகத் தாக்குதல்களை முன்னெடுத்தார்கள்.
போர்க்காலத்தில் கருணா அம்மான் கிழக்கு மாகாண படைத்தளபதி பொறுப்பாளராகச் செயற்பட்டார். இதன்போதே இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம்.
கருணா அம்மான் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து விலகி இராணுவத்துக்கும், அரசுக்கும் ஒத்துழைப்பு வழங்கினார். இதன்பின்னரே இவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது.
கருணா பல்வேறு இரகசியத் தகவல்களை அரசுக்கு வழங்கினார். இவர் வழங்கிய தகவல்களை அடிப்படையாகக்கொண்டே இறுதிக்கட்டப் போர் குறுகிய காலத்தில் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டது.
ஆகவே, தற்போது இவர் குறிப்பிட்டுள்ள கருத்து இராணுவத்தில் உயிர்நீத்தவர்களின் உறவுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் காணப்படுகின்றது.
எனவே, இவ்வாறான கருத்துக்களைக் குறிப்பிடுவதை இவர் தவிர்த்துக்கொள்ள வேண்டும். இறுதிக்கட்டப் போரை மிக விரைவில் நிறைவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற தேவை காணப்பட்டதால் இவரது உதவியை அப்போது பெற்றுக்கொண்டோம்.
போர்க்காலத்தில் 2 ஆயிரம் தொடக்கம் 3 ஆயிரம் வரையிலான இராணுவத்தினரை ஒரே இரவில் கொன்றதாக முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் எனப்படும் விநாயக மூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளமை ஒன்றும் பாரதூரமான விடயமல்ல என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.