அமெரிக்காவில் உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு
27 Jun,2019
வாஷிங்டன் : அமெரிக்காவில் நடைபெறும் உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கு தமிழகத்தில் இருந்து 25 பேர் வரை அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டு இருப்பதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 10வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிகாகோவில் ஜூலை 4ம் தேதியில் இருந்து 7ம் தேதி வரை நடைபெற உள்ளது. இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், உலகம் முழுவதிலும் இருந்து 50க்கும் மேலான நாடுகளில் இருந்து அறிஞர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர் என்றார்.
தமிழகத்தில் இருந்து பல்வேறு தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் தாக்கல் செய்தவர்களுக்கே வாய்ப்பளிக்கப்படும் என்றும் கூறினார். மாநாட்டில் படிக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகள், அதன் பின்னர் இணையதளத்தில் முழுமையாக வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறினார். மாநாட்டிற்கு வேண்டிய நிதியுதவியை தமிழக அரசு வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வட அமெரிக்கா தமிழ்ச் சங்கமும் சிகாகோ தமிழ்ச் சங்கமும் இணைந்து இந்த மாநாட்டை நடத்துவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜூலை 4ம் தேதி சிறப்பு பட்டிமன்றம், ஈழத் தமிழ் நாட்டியமும் மரபுகளும், தமிழ் இசை, இளைஞர் போட்டிகள், குறும்பட போட்டிகள், கங்கை கொண்ட சோழன் இராஜேந்திர சோழன் நாட்டிய நாடகம் நடக்க இருக்கிறது. ஜூலை 5ம் தேதி தமிழ் இசை, கவியரங்கம், இலக்கிய விநாடி வினா நடக்க உள்ளது. அன்று மாலை சிகாகோவில் ஐயன் திருவள்ளுவர் சிலை திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து இயற்கையில் பிறந்த தமிழ் - இசைப்பெரும் நாட்டிய நாடகம் நடக்க உள்ளது.
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=505379
மாநாடு நிகழ்வுகள்:
· நிகழ்த்துநர் : அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) & சிகாகோ தமிழ்ச் சங்கம் (CTS).
· நிகழிடம் : சாம்பர்க் (Schamburg) கருத்தரங்கு மையம், சிகாகோ-அமெரிக்கா.
· நிகழும் நாள் : 4th, 5th, 6th, & 7th ஜூலை 2019.
பெரும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் : ஜூலை 4 & 5.
· உலகத் தமிழ் தொழில்முனைவோர் கூடல் (GTEN) : ஜூலை 6.
· அணிவகுப்பு & பெருவிருந்து : ஜூலை 6, மாலை.
· தமிழ் ஆராய்ச்சி மாநாடு : ஜூலை 5 & 6.
· நினைவேந்தல் : அமரர், முனைவர் வா.செ.குழந்தைசாமி
துணைத் தலைவர் – IATR & முன்னாள் துணைவேந்தர் – அண்ணா பல்கலைக்கழகம். இம்மாநாடு, அமெரிக்காவில் நிகழ விழைந்து பெரும்பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தகக்து.
ஜூலை 4, 5ம் தேதிகளில் தமிழ் ஆராய்சி நகர்வுகளுக்கும், 6ம் தேதி நடக்கவிருக்கும் உலகத்தமிழ் தொழில்முனைவர் கூடலில் அமெரிக்க வாழ் இளம் தொழில்முனைவர்கள், வெற்றியடைந்த தொழிலதிபர்கள் மற்றும்
இந்தியா உட்பட உலக நாடுகளில் வசிக்கும் பிரபல தொழில்முனைவர்களும் இதில் கலந்து கொள்ள உள்ளனர் என GTEN அமைப்பு ஒருங்கிணைப்பாளர் சிவா மூப்பனார் தெரிவித்தார்.
10ஆம் ஆண்டு உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு அறிவிப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ் வளர்ச்சி, தொல்லியல்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், தன் துறை சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் மாநாட்டுக்கு தேவையான உதவிகளை செய்வதாக தெரிவித்தார்.