அகதிகளாகச் சென்று அடிமைப்பட்டு அவலப்படும் பெண்கள் அவுஸ்திரேலியாவுக்கு ஆருயிரை பணயம் வைத்து ஆழ்கடல் பயணம்
15 Jul,2018
திறந்த வெளிச்சிறையான தமிழ்நாட்டில் ஆயுள் முழுக்க ஏழை அடிமையாகக் கிடந்து சாகிறதை விட பணக்காரனாக்கும் அவுஸ்திரேலியாவை நோக்கிப்போகவே விருப்பப்படுகிறோம் என்கிறார்கள் உயிரை பணயம் வைத்து பயணம் செய்யும் தமிழக முகாம்களில் வாழும் இலங்கை அகதிப் பெண்கள்!
இலங்கையில் போர் தொடங்கிய பின் அங்கிருக்கும் தமிழர்கள் பல்லாயிரம் பேர் உயிர் பிழைப்பதற்காகத் தமிழ் நாட்டிற்குள் அகதிகளாக வந்து சேர்ந்தனர். ராமநாதபுரம், கோயம்புத்தூர், ஈரோடு, கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் முகாம்கள் உருவாக்கப்பட்டு பல ஆண்டுகளாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சுதந்திரமான வாழ்க்கையும் பல சிறப்பு வசதிகளும் தரப்பட்டு பாதுகாப்பான வாழ்க்கை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழகத்தை மாற்றி மாற்றி ஆளும் கழக அரசுகள் பெருமிதப்படுவது வழக்கம்.
ஆனால் இலங்கை அகதிகளோ காவல்துறையின் தீவிர கண்காணிப்பு, மிகக் கடுமையான சட்ட திட்டங்கள், அடிக்கடி அடையாள அணிவகுப்பு, எந்த வளர்ச்சிக்கும் வாய்ப்பில்லாத அடிமை நிலை என்று தாங்கள் நசுக்கப்படுவதாக ஆதங்கப்படுகின்றனர். இதனால் அவுஸ்திரேலியா உள்ளிட்ட வசதியான நாடுகளுக்கு சிலர் தப்பிச் செல்கின்றனர். அவர்கள் அங்கே வளமாகச் செட்டிலாவதைப் பார்த்து தமிழக முகாம்களில் இலங்கை அகதிகள் அவுஸ்திரேலியாவுக்கு ஓடித் தப்புவது தொடர் கதையாகி விட்டது.
மத்திய மாநில அரசுகள் இதைத்தடுக்க கடும் நடவடிக்கை எடுத்தாலும் அரசின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு அவுஸ்திரேலியா நோக்கி கள்ளத்தோணியில் செல்வது வாடிக்கையாகிவிட்டது. இவர்கள் கடல் வழியே செல்லும் ஒவ்வொரு நொடியும் மரணத்தை உரசியபடியே பயணிக்கும் நிலைதான்.
இதை விவரித்தனர் இலங்கை அகதி முகாம்களைச் சேர்ந்த சில யுவன்– யுவதிகள். உயிருக்குப் பயந்து இலங்கையிலிருந்து கண்ணீர் வழிய வந்த எங்களை அரவணைத்துக் கொண்ட தமிழ் மண்ணுக்கு நாங்கள் என்றும் நன்றிக்கடன் பட்டவர்கள்தான். ஆனால் இந்த மண்ணில் வெறும் கால்நடைகள் போல்தான் நாங்கள் நடத்தப்படுகிறோம். ஆடு, மாடுகளை தொழுவத்தில் கட்டி வைத்து வேளாவேளைக்கு வயிறு நிறையத் தீவனம் போடுவது போல் தான் எங்களை முகாமில் வைத்து ரேஷன் போடுகிறார்கள்.
எங்களுக்கும், எங்கள் சந்ததிகளுக்கும் உயர்கல்வி, உயர் உத்தியோகம், கௌரவமான வாழ்க்கை முறை வேண்டாமா? அதனால்தான் அவுஸ்திரேலியா நோக்கி மீண்டும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு பயணிக்கிறோம். சில வருடங்களுக்கு முன்பெல்லாம் தமிழ் நாட் டின் எந்த மாவட்டக் கடல் வெளியிலிருந்தும் அவுஸ்திரேலியாவுக்கு பயணிக்க 25 ஆயிரம் ரூபாய் தேவைப்பட்டது. ஆனால் இன்று தலைக்கு இரண்டு இலட்சம் வரை வசூலிக்கிறார்கள்.
கடலில் மீன்பிடித்தல் மற்றும் கடல் வழி வர்த்தகத்தில் அனுபவமுள்ள சில நபர்கள் கூட எங்களுக்கான இந்தப் பயணத்தை ஏற்பாடு செய்கிறார்கள். முதலில் ஆளாளுக்கு ஒரு தொகையை போட்டு பழைய மீன் பிடி லோஞ்ச்சை வாங்கி அதை எங்களுக்கு ஏற்ற மாதிரி வடிவமைத்துக் கொள்வோம். இங்கிருந்து அவுஸ்திரேலியா செல்ல நிச்சயம் 25 நாட்களாகும்.
இலங்கையிலிருந்து தப்பி வந்தவர்களுக்கு கடல் பரிச்சயம் இருக்கும். ஆனால் இங்கே முகாமில் பிறந்து வளர்ந்த அவர்களின் பிள்ளைகளுக்குக் கடல் பரிச்சயம் இருக்காது. ஆதலால், அவுஸ்திரேலியா கிளம்பும் ஒரு வாரத்திற்கு முன்பு குழந்தைகளை பல மணி நேரம் கடலில் குளிக்க விட்டுப் பழக்கப்படுத்துவோம்.
நடுராத்திரி வேளைகளில் தூத்துக்குடி, சென்னை, வேளாங்கண்ணி ஏதோ ஒரு கடற்கரையில் ஒன்று கூடி கிளம்புவோம். இந்திய எல்லையை தாண்டும் வரையில் கடற்படையின் கண்ணிலோ அல்லது சந்தேகத்திலோ விழாமல் இருக்க வேண்டியது கடவுளின் கருணைதான். ஒருவேளை அவர்கள் கவனித்து படகு அருகில் வந்தால் எங்கள் படகினுள் இருக்கும் பெண்கள், குழந்தைகளை அடிமட்டத்திற்குச் சென்று ஒளிந்து கொள்ளச் சொல்வோம். ஆண்கள் மட்டும் மேல் மட்டத்தில் நின்று சரக்கு எடுத்துச் செல்கிறோம் என்று ஏதாவது பொருளை காண்பித்து தப்பிப்போம்.
அவுஸ்திரேலியா நோக்கிய பயணப் பாதையில் கண்டிப்பாக இலங்கை கடல் வெளியைக் கடக்க வேண்டியிருக்கும். அப்போது மனம் ரணப்படும். சொந்த மண்ணை விட்டு இந்தியாவுக்கு அகதியாகச் சென்று அங்கு வளர்ச்சிக்கு வழியில்லை என்று மற்றொரு நாட்டுக்கு அகதியாக அலையும் நம்பிழைப்பு நாய்க்கும் வரக்கூடாது என்று கண்ணீர் விட்டபடி கடப்போம். கடற்படையின் கண்ணில் படுவது சில நேரங்களில் பேராபத்துத்தான். இப்படி செல்லும் படகுகளால் தங்களுக்கு பிரச்சினை இல்லை என்று அவர்கள் நினைத்தால் தப்பிப்போம்.
துப்பாக்கியை நிமிர்த்தியபடி வந்து நின்றால் சாமர்த்தியமாக பேசியும், நடித்தும் அவர்களை கடக்க வேண்டும். இதனால் பெரும்பாலும் இரவுகளில் தான் வேகமாக அவுஸ்திரேலியா நோக்கிப் படகை வேகமாக செலுத்துவோம். மற்ற படகுகள் கப்பல்களில் இருப்பதுபோல் துல்லியமாய் திசைகாட்டும் கருவியோ, ரேடார் தொடர்போ, சாட்டிலைட் போனோ எங்களிடம் இருக்காது. அனுபவசாலி லோஞ்ச் டிரைவர் வைத்திருக்கும் சிறு திசைகாட்டி அவரது அனுமானம் ஆகியவற்றை நம்பியே படகு செலுத்தப்படும். இதனால் சில வேளைகளில் தவறான திசையில் சென்று சிக்குவது, கடல் கொள்ளையரிடம் சிக்குவது, சர்வதேச கடற்பரப்பில் எந்த நாட்டு கடற்படையும் துப்பாக்கியை நீட்டுவது என்ற பிரச்சினைகள் வெடிக்கும். ஆகவே ஒவ்வொரு நொடியுமே உயிருக்கு உத்தரவாதம் அற்ற நிலைதான். கடற்கொள்ளையர்கள் இல்லாமல் சில நேரங்களில் சர்வதேச கடற்பரப்பில் பல நாட்டு ரவுடிப் படகோட்டிகள் வருவார்கள். அவர்களிடமிருந்து எங்கள் பெண்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டியது மிகப்பெரிய சவால்தான்.
கிட்டத்தட்ட ஒரு மாதகாலம் பயணித்து அவுஸ்திரேலியா கடல் எல்லையை கண்டுவிட்டாலும் மகிழ்ச்சி வந்து விடுமென சொல்ல முடியாது. கரையில் கடற்படையினரின் நடமாட்டம் அதிகமிருப்பதாகத் தெரியவந்தால் கடலில் குதித்து நீந்திக் கரையேறிடச் சொல்லி படகோட்டி உத்தரவிடுவார். இப்படி நீந்துகையில் இறந்தோரும் உண்டு. அவுஸ்திரேலியா எல்லையை தொட்டு விட்ட நிலையில் படகில் எரிபொருள் தீர்ந்து விட்டதால் கடலில் குதித்து 6 கிலோமீற்றர் நீந்திச் சென்று கரையேறி வாழ்க்கையில் செட்டிலானவர்களும் உண்டு. இப்படி ஒவ்வொரு நொடியும் உயிரை பணயம் வைத்துத்தான் அந்த தேசத்தினுள் புக வேண்டும்.
முன்பெல்லாம் அவுஸ்திரேலியா அரசு இப்படி தப்பித்து வரும் அகதிகளை தீர விசாரித்து அவர்களால் தங்கள் நாட்டிற்கு எந்த தீங்கும் வராது என்று உறுதியாக நம்பிய பின் அவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்துவிடும். படிப்படியாக குடியுரிமை உள்ளிட்ட வசதிகளும் கிடைத்து விடும். தமிழ் நாட்டில் மாதம் வெறும் 15 ஆயிரம் சம்பாதிக்க வழி இல்லாதவர்கள் எல்லாம் அவுஸ்திரேலியாவில் இன்று மாதம் ஒரு இலட்சம் வரை சர்வ சாதாரணமாக சம்பாதிக்கிறார்கள். இதை கேள்விப்பட்டுத் தான் தமிழகத்திலிருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகள் படகேறுகிறோம்.
ஆனால் இப்போது இந்தியரசு கேட்டுக்கொண்டதால் அவுஸ்திரேலியா அரசு இலங்கை தமிழ் அகதிகளை இருகரம் நீட்டி அரவணைப்பதில்லை. கடும் கெடுபிடி கள், விசாரணை, சிறை, திருப்பி அனுப்புதல் ஆகிய நடவடிக்கைகளை காட்டுகிறது. ஆனாலும் அவுஸ்தி ரேலியா சிறையில் அடைக்கப்பட்டாலும்கூட சகல வசதிகளுடன் கௌரவமாக நடத்தியே விசாரிக்கிறது. ஒருவேளை எங்களுக்கு தெரிந்த தச்சுப்பணி, தோட்ட வேலைகள், எலெக்ட்ரிக்கல் பணி ஆகியவை தங்கள் மக்களுக்கு தேவை என்று நினைத்தால் எங்களை அங்கே பிழைத்துக்கொள்ள அனுமதிக்கிறது. அப்படியொரு வாய்ப்பு கிடைத்துவிட்டால் வாழ்க்கை சொர்க்கமாகி விடுகிறது எங்கள் மக்களுக்கு என்கிறார்கள்