அழிவுப் பாதையில் இளம் சமுதாயம்! -
15 Jul,2018
அழிவுப் பாதையில் பயணிக்கின்ற இளைஞர்களை மீட்டெடுக்க அனைவரும் முன்வர வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். கைதடியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“சமூகங்களுக்கிடையே வன்முறைக் கலாச்சாரம், போதைப் பொருள் பாவனை, களவு முயற்சிகள், பாலியல் குற்றங்கள் எனப் பலதரப்பட்ட சமூக எதிர்மறை நிகழ்வுகள் அதிகரித்து வருவது கவலைக்குரிய விடயம். இவ்வாறான தீய பழக்க வழக்கங்களில் இருந்து எமது பிள்ளைகளைப் பாதுகாக்க வேண்டியது குறித்த கிராமங்களைச் சேர்ந்த பெரியவர்களினதும் வாலிபர்களினதும் தலையாய கடமையாகும் .
இளைஞர்களை அழிவுப் பாதையில் இட்டுச் செல்வது என்பது மிக இலகுவான ஒரு காரியம். அவர்களை அவர்களின் வயது, உடல் இச்சைகளுக்கேற்ப சில தூண்டல் விளைவுகளை உருவாக்கி அவற்றின் அடிப்படையில் பல தீய காரியங்களை முன்னெடுக்க வைப்பது சுலபம். இவ்வாறான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த ஏதாவது ஒரு தீய சக்தி எமது பகுதிகளில் செயற்பட்டு வருகின்றதோ என்பதை நான் அறியேன்.
ஆனால், இவ்வாறான தீய சக்திகளிடமிருந்து எமது பிள்ளைகளைப் பாதுகாத்து அவர்களை சரியான தடத்தில் செல்ல வைப்பதென்பது ஓர் இரு நாட்களில் நிறைவேற்றப்படக் கூடிய விடயமாக கொள்ளப்படக் கூடாது.
மாறாக இவர்களை மீண்டும் சுமுக நிலைக்குக் கொண்டு வருவதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். இளைஞர்கள் தான் இளைஞர்களை இன்றைய காலகட்டத்தில் கட்டுப்படுத்த முடியும். வயது வந்தோரின் கருத்துக்களை அசட்டை செய்வது இந்த நவீன யுகத்தின் காலத்தின் கோலம். வயது வந்தவர்கள் தமது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் இளைஞர்களாய்ப் பார்த்து இழி செயல்களை ஒழிக்க முன் வந்தால்த் தான் இவற்றை நாம் கட்டுப்படுத்த முடியும்.
எது எவ்வாறாக இருப்பினும் அழிவுப் பாதையில் பயணிக்கின்ற இளைய சமூகத்தை மீட்டெடுத்து சரியான பாதையில் செல்ல வழிகாட்டுகின்ற பாரிய பொறுப்பு அந்தந்தக் கிராமங்களைச் சேர்ந்த பெரியவர்களினதும் வாலிபர்களினதும் பொறுப்பாகும்.
இலத்திரனியல் சாதனங்களில் மட்டமான செய்திகளையும் சித்தரிப்புக்களையும் பார்த்து இன்புறுவதற்கு பதிலாக நல்ல கருத்தாழம் மிக்க உரைகள், உலகின் அபிவிருத்தி, நவீன கண்டுபிடிப்புக்கள், இசைக் கலை விருத்தி ஆகியவற்றில் ஈடுபடச் செய்யுங்கள்.
இதேவேளை, அவர்களை மனிதாபிமானம் நிறைந்த நல்ல மனிதர்களாக சமூகங்களுக்கிடையே உலாவர அனுமதியுங்கள் எனவும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.