யாழ். கோட்டையில் இராணுவத்தினர் முகாமிட அனுமதிக்க முடியாது! இன்னமும் இராணுவக் கட்டுப்பாட்டிலேயே!
11 Jul,2018
யாழ்ப்பாணம் - கோட்டையில் நிரந்தரமாக இராணுவத்தினர் முகாமிட ஒரு போதும் அனுமதிக்க முடியாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். “ யாழ். ஒல்லாந்தர் கோட்டையை இராணுவத்திற்கு கொடுப்பததென்ற விடயம் சட்டமாக வரவில்லை. ஆனால், பலராலும் பேசப்படுகின்றது. இதனை ஆரம்பித்து வைத்தவர் வடமாகாண ஆளுநர் தான்.
அவ்வாறு இராணுவத்திற்கு ஒல்லாந்தர் கோட்டையைக் கொடுக்க வேண்டுமாயின் யாழ். மாநகர சபையிடம் அனுமதி கோர வேண்டும்.
வடமாகாணத்தில் இருந்து இராணுவம் வெளியேறுவார்கள் எனின், தற்காலிகமாக இராணுவத்தினரை ஒல்லாந்தர் கோட்டையில் வைத்திருக்கலாமே தவிர, நிரந்தரமாக இராணுவத்தினர் முகாமிட அனுமதிக்க முடியாது.
ஒல்லாந்தர் கோட்டை தொல்பொருள் சின்னம் என்பதனால், அங்கு படையினரை முகாமிட அனுமதித்தால், பாதிப்புக்களை எதிர்நோக்க நேரிடும் என்ற பிரச்சினையும் உள்ளது.
வடமாகாண சபை சுற்றுலா மையம் ஒன்றிணை அமைக்க கோரிய போது, தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். ஆனால், படையினர் வரும்போது, ஏன் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்பதும் புரியவில்லை. சுற்றுலா மையம் அமைக்க கேட்ட போது அனுமதிக்காத தொல்பொருள் திணைக்களம், இராணுவத்தினருக்கு ஒல்லாந்தர் கோட்டையை கொடுப்பது மனவருத்தத்தினை தருகின்றது.
அதேநேரம், இராணுவத்தினர் ஒல்லாந்தர் கோட்டையில் நிரந்தர முகாமிடுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
வடக்கு இன்னமும் இராணுவக் கட்டுப்பாட்டிலேயே!
போர் முடிவுக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகின்ற போதிலும், வடக்கு மாகாணத்தை மத்திய அரசாங்கம், தொடர்ந்தும் தனது இராணுவக் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கிறது என, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்ட இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினனுக்கும் வட மாகாண முதமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு, கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் செயலகத்தில், இன்று நடைபெற்றது.
இதன்போது, தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பாக வினவிய கனேடிய உயர்ஸ்தானிகர், அரசமைப்பைக் கொண்டு வந்தால் நாட்டின் இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியுமா எனவும் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளிக்கும்போதே, முதமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
'' 70 ஆண்டுகளாக பெரும்பான்மைச் சமூகம், சிறுபான்மைச் சமூகத்தைக் கட்டுப்படுத்தி, அவர்களைத் தமது அதிகாரத்தின் கீழ் வைத்திருந்தது. மத்திய அரசாங்கம், வடக்கை தமது கட்டுப்பாட்டுக்குள் தான் இன்றும் வைத்திருக்கின்றது. ஒன்றரை இலட்சம் இராணுவத்தினர், வடபகுதியில் உள்ளனர். அதேபோல சகல தரப்பினரும் எம்மை கட்டுப்படுத்தவே நினைக்கின்றனர். சட்டங்களும் எமக்கு எதிராக இருக்கின்றன.
இவ்வாறான கட்டுப்பாட்டுக்கு மத்தியில், ஏதாவது அரசியல் ரீதியான விடயங்களைத் தீர்ப்பதென்பது கடினம்.எனவே, அரசமைப்பை மிக விரைவில் உருவாக்கி, அந்த அரசமைப்பை இரு இனத்தவர்களும் ஏற்றுக்கொண்டு, முன்னோக்கி நகர்த்தினால் மாத்திரமே, இந்த நாட்டின் அபிவிருத்தியை உறுதிப்படுத்த முடியும்' என்றும் முதலமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.