ஐ.நாவின் முக்கிய பொறுப்புக்கு சிறிலங்காப் பிரதிநிதி: - நீக்குமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தல் !
27 Jun,2018
ஐ.நா மனித உரிமைப் பேரவையின் சமூக மன்றத்துக்கான 2018ம் ஆண்டின் அவைத்தலைவர் மற்றும் அறிக்கையாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு.அப்துல் அசீஸ் அவர்களை நீக்கம் செய்யுமாறு வலிறுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் நா.தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை அமைச்சர் அய்யாத்துரை ஜெயக்குமார் அவர்கள் விடுத்துள்ள கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வரும் 2018ம் ஆண்டுக்கான தொனிப்பொருளாக 'விளையாட்டையும் ஒலிம்பிக் இலட்சியத்தையும் பயன்படுத்தி அனைவருக்குமான மனிதவுரிமைகளை மேம்படுத்தி, அவற்றுக்கான உலகளாவிய மதிப்பை வலுப்பெறச் செய்யும் வாய்ப்புகள்' என்பதை முன்மொழிந்தமைக்காக ஐநா மனிதவுரிமைப் பேரவையைப் பாராட்டும் நாம், அதன் சமூக மன்றத் தலைமைப் பதவிக்கு சிறிலங்காவின் நிரந்தரப் பிரதிநிதியைத் தெரிந்தெடுப்பது மனிதவுரிமைப் பேரவைக்கு அவமதிப்பும், பொதுவாக மனிதவுரிமை நெறிகளுக்குப் பெருங்கேடும் ஆகும் என்று சுட்டிக்காட்டுகின்றோம்.
'இனவழிப்பு உள்ளிட்ட பன்னாட்டுப் போர்க்குற்றங்கள் புரிந்த நாடென்ற வகையில் சிறிலங்காவிடம் சமூக மன்றத் தலைவர் என்னும் முக்கியப் பெரும்பொறுப்பை வழங்குவது பொருத்தமற்றது என நம்புகிறோம். 'அனைவரும் மனித உரிமைகளைத் துய்ப்பதை மேம்படுத்துவதற்குப் தேவையான உள்நாட்டு, பன்னாட்டுச் சூழலுடன் தொடர்புள்ள சிக்கல்கள் குறித்துப் பயனுள்ள திறந்த உரையாடல்' என்று சமூக மன்றத் தலைமைப் பொறுப்பை 35ஃ28 தீர்மானம் வரையறுக்கிறது.'
'சமூக மன்றம் போற்றிக் காக்க வேண்டிய மனிதவுரிமை நெறிகளை சிறிலங்கா மதிப்பதில்லை என்பது மறுக்கவியலாத செய்தி. சிறிலங்காவின் அத்துமீறல்களுக்குச் சான்றாக 2018 சனவரி 28ம் நாள் வெளியிடப்பட்ட 'சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனிதவுரிமைகள் ஆகியவற்றை மேம்படுத்தல்' என்னும் உயர் ஆணையரின் அறிக்கையைப் படித்துப் பார்த்தாலே போதும்.'
'சிறிலங்காவிற்குத் தரப்படும் இந்தப் பதவியமர்த்தம் நீக்கம் செய்யப்படுமானால், மனிதவுரிமைப் பேரவையும் தலைவர் அலுவலகமும் மனிதவுரிமை மீறல்காரர்களை சகித்துக் கொள்வதில்லை என்றும், உறுப்பரசுகள் அனைத்தும் மனிதவுரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டியிருக்கும் என்றும் பன்னாட்டுச் சமுதாயத்துக்கு சமிக்ஞை செய்வதாக அமையும் என நம்புகிறோம்.'
'மேற்சொன்னதைக் கணக்கில் கொண்டு, மனிதவுரிமைப் பேரவை, சமூக மன்றம் ஆகியவற்றின் நம்பகத் தன்மையைக் காக்கும் பொருட்டு, மேதகு ஏ.எல். அப்துல் அசீஸ் அவர்களை 2018 சமூக மன்றத்துக்கான அவைத் தலைவர் – அறிக்கையாளராக ஏற்றுக் கொண்டிருப்பதை நீக்கம் செய்யும் படியும், வட்டாரச் சுழற்சிக் கொள்கையைக் கருத்தில் கொண்டு மாற்றாக ஒருவரை அமர்த்தும் படியும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மீண்டும் வலியுறுத்துகிறது.
இவ்வாறு செய்வதன் மூலம். மனிதவுரிமைப் பேரவை ஐக்கிய நாடுகள் பட்டயத்தின் நல்லுணர்வையும் நோக்கங்களையும் கொள்கைகளையும் போற்றிக் காப்பதில் தன் அதிகாரவுரிமையையும் நேர்மையையும் அழுத்தமாய் உணர்த்தும்' என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.