புலிகள் காலத்தில் முன்வைத்த அரசியல் முன்மொழிவுகளிலிருந்து பின்வாங்குகிறது அரசு-
24 Jun,2018
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு செயற்பட்ட காலத்தில் அரசியல் தீர்வு சம்பந்தமாக இலங்கை அரசு பல்வேறு முன்மொழிவுகளை முன்வைத்திருந் தது. ஆனால் இன்று அரசு அதிலிருந்து பின்வாங்குகின்றது. இதனைப் சர்வதேச சமூகம் கவனத்தில் எடுக்கவேண்டும். இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உரைகள் அடங்கிய நூல் வெளியீட்டு விழா வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
சாதாரணமாக ஒரு நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாக அந்த நாட்டில் வாழ்கின்ற வேறுபட்ட மக்கள் மத்தியிலுள்ள அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்பட்டு அந்தத் தீர்வுகள் ஒரு அரசியல் சாசனத்தில் உள்ளடக்கப்படும். நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பதாக அது நடைபெறும். ஆனால் துரதிஸ்டவசமாக இலங்கையைப் பொறுத்தவரையில் அவ்விதமான ஒரு விடயமும் நடைபெறவில்லை.
அவ்வாறு நடைபெற்றிருந்தால் 1948ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்த பொழுது தமிழர்களுடைய தேசிய இனப்பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணப்பட்டிருக்கும். டொனமூர் ஆணையாளர் முன்பாகக் கருத்துக்களைக் கூறிய கண்டிய தலைவர்கள் இந்த நாட்டில் கூட்டாட்சி அமைப்பு முறை ஏற்பட வேண்டுமென்று கூறியிருந்தார்கள். ஆனால் அதனை நாங்கள் ஆதரிக்கவில்லை. எங்களுக்குப் பூரண சுயாட்சி வேண்டுமென்று இளைஞர் கழகம் கேட்டார்கள்.
இதன் பின் சோல்பரி ஆணைக்குழு வந்தது. அந்த நேரத்தில் நாங்கள் ஐம்பதிற்கு ஐம்பது கேட்டோம். அதாவது ஐம்பது வீதம் பெரும்பான்மையினருக்கும் ஐம்பது வீதம் சிறுபான்மையினருக்கும் என்று கேட்டோம். எமது உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் எமது இறையாண்மையின் அடிப்படையில் எமக்குப் பிராந்திய சுயாட்சி கிடைக்க வேண்டுமென்று நாங்கள் கேட்கவில்லை. பிராந்திய சுயாட்சியை கேட்டிருந்தால் இந்தப் பிரச்சனையை அப்போதே தீர்த்து இருக்கலாம்.
அதனால் அந்தப் பிரச்சனைகள் தீராது தொடர்கின்றது. இந்தியக் குடியுரிமை பறிக்கப்பட்டது. நூற்றுக் கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊர்களை இழந்தார்கள். பெரும்பான்மையின மக்கள் தமிழ் பேசும் மக்களின் இடங்களில் குடியேற்றப்பட்டார்கள். இந்தக் குடியேற்றங்களால் கிழக்கு மாகாணத்தின் தோற்றம் மாற்றமடைந்தது. அதே போல இன்றைக்கு வடமாகாணத்திலும் நடைபெறுகின்ற சூழலை நாங்கள் பார்க்கின்றோம். அது நிறுத்தப்பட வேண்டியதொரு செயற்பாடாகும்.
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பதாக நாங்கள் பிராந்திய சுயாட்சியுடன் பெரும்பான்மையாக வாழ்ந்து வந்த பிரதேசங்களில் கணிசமான அதிகாரப் பகிர்வின் மூலம் அதிகாரங்களைப் பெற்றிருந்தால் இவை எல்லாவற்றையும் தவிர்த்திருக்கலாம். அது இப்போது முடிந்த கதை. ஆனாலும் அதைப் பற்றிக் கதைக்கலாம். ஆனால் அதைப்பற்றிக் கதைப்பதால் எந்தவிதமான பிரயோசனமும் வரப் போவதில்லை.
இன்றைக்கு நாடு முழுவதும் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டுள்ளது. எல்லா மாகாணங்களும் கூடிய அதிகாரத்தைக் கேட்டிருக்கிறார்கள். காணி, சட்டம் ஒழுங்கு அதிகாரம் தங்களுக்கு தரப்பட வேண்டுமென்று கோரியிருக்கின்றார்கள். மத்தியினுடைய தலையீடுகள் இருக்கக் கூடாதென்றும் கேட்டிருக்கின்றார்கள். ஆளுநருடைய அதிகாரங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டுமென்று கேட்டிருக்கின்றார்கள். தென் மாகாண முதலமைச்சர், ஆளுநர் பதவியே வேண்டாமென்றும் ஆளுநர் பதவி நீக்கப்பட வேண்டுமென்றும் கூறியிருக்கின்றார்.
நாங்கள் எவரையும் பகைக்க வேண்டிய அவசியமில்லை. எல்லோருடனும் நாங்கள் நட்புறவைப் பேண வேண்டும். எங்கள் நியாயத்தை விளக்க வேண்டும். நீதியை விளக்க வேண்டும். ஏனைய நாடுகளில் பல்வேறு இனங்கள் பல்வேறு மதங்களைச் சார்ந்த பல்வேறு கலாசாரங்களைச் சார்ந்த மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் எவ்விதமான ஆட்சி முறைகள் பின்பற்றப்படுகின்ற என்பதை நாங்கள் விளக்க வேண்டும். அதனை தென்னிலங்கை மக்கள் அறிய வேண்டும். இன்றைக்கு தென்னிலங்கை மக்களும் அதனை அறிந்து கொண்டு வருகின்றார்கள்.
புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. அதனை நாங்கள் முன்னெடுத்து ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்கு வழி இருக்குமாக இருந்தால் அந்தச் சந்தர்ப்பத்தை இழக்கக் கூடாது. அந்தச் சந்தர்ப்பத்தை நாங்கள் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். அந்தக் கருமத்தில் நாங்கள் முழுமையாக ஈடுபட வேண்டும். எங்கள் பங்களிப்பையும் முழுமையாக செலுத்தி அதில் நாங்கள் ஈடுபட வேண்டும்.
அடிப்படையான விடயங்களை நாங்கள் விட்டுக் கொடுக்க முடியாது. அவ்வாறு விட்டுக் கொடுக்க முடியாத விடயங்களும் இருக்கின்றன. ஆனால் நாங்கள் ஈடுபட்டு அந்தக் கருமத்தை முன்னெடுத்து எமது மக்களுக்கு போதிய பாதுகாப்பை அவர்களது உரிமையை உரித்தை அங்கீகரித்துக் காணக்கூடியதொரு வழி இருக்குமாக இருந்தால் அந்தச் சந்தர்ப்பத்தை நாங்கள் இழக்கக் கூடாது. அதனை நாங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
இலங்கையில் இனப்பிரச்சனைக்குத் தீர்வைக் காணுவதில் சர்வதேச சமூகத்துக்கு தார்மீகக் கடமை உள்ளது. 1983 ஆம் ஆண்டு அம்மையார் இந்திரா காந்தியின் தலையீடு காரணமாகத் தான் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. ஆயினும் அவர் கொலை செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து அவரது மகன் ராஜிவ்காந்தி இந்தியாவின் பிரதமரானார்.
அவரெடுத்த முயற்சியின் காரணமாகத் தான் 13ஆவது அரசமைப்புத் திருத்தம் முன்னெடுக்கப்பட்டு மாவட்டச் சபைகளைப் பெற முடியாமல் இருந்த எமக்கு மாகாண சபைகள் வழங்கப்பட்டன. வடகிழக்கு இணைக்கப்பட்டு ஒரு மாகாண சபையாக பல்வேறு அதிகாரங்கள் வழங்கப்பட்டு ஒரு முதலமைச்சர் அமைச்சர் சபை உருவாக்கப்பட்டு ஆளுநர் உருவாக்கப்பட்டது. அதனூடாக பலதரப்பட்ட கருமங்கள் நடைபெற்றன.
13ஆவது திருத்தத்தை நாங்கள் ஒரு தீர்வாக ஏற்றுக் கொள்ளவில்லை. அண்ணண் அமிர்தலிங்கம், சிவசிதரம்பரம், நான் உள்பட மூவரும் கையொப்பமிட்டு ராஜிவ் காந்திக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தோம். அந்தக் கடிதத்தில் 13 ஆவது திருத்தம் ஒரு தீர்வாக அமையவில்லை என்பதை தெளிவாகக் குறிப்பிட்டிருந்தோம். ஒரு நிரந்தரமான தீர்வை பெற்றுக் கொள்வதற்கு தொடர்ந்தும் நாங்கள் பயணிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தோம்.
தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக சர்வதேச சமூகம் இலங்கை அரசுக்கு முழுமையான ஆதரவை வழங்கியது. இதை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த அடிப்படையில் நாங்கள் ஒரு நியாயமான தீர்வை ஏற்படுத்துவோம் என்று இலங்கை அரசு சர்வதேச சமூகத்துக்கு வாக்குறுதியைக் கொடுத்தது.
அது மாத்திரமல்ல தமிழீழ விடுதலைப் புலிகள் செயற்பட்ட காலத்தில் அரசியல் தீர்வு சம்மந்தமாக இலங்கை அரசு பல்வேறு முன்மொழிவுகளை முன்வைத்திருந்தது. ஆனால் இன்றைக்கு அவர்கள் அதிலிருந்து பின்வாங்குகின்றார்கள். இதைப் சர்வதேச சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.
இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு ஒரு நியாயமான நிரந்தரமான அரசியல் தீர்வைக் காண்பதற்குரிய பங்களிப்பைச் செய்வதற்கு தமக்கொரு தார்மீகக் கடமை இருக்கிறதென்பதை சர்வதேச சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். இதில் அவர்கள் தவற முடியாது. அவ்வாறு இதில் அவர்கள் தவறினால் அவர்களுடைய செயற்பாடு சர்வதேச ரீதியாக அர்த்தமற்றதாகிப் போய்விடும் – என்றார்.