தமிழரின் நிலங்களை அபகரிக்க கழுகுகள் வட்டமடிக்கின்றன! - முதலமைச்சர்
27 May,2018
தமிழர்களின் பாரம்பரிய நிலங்களையும் வாழ்விடங்களையும் வளம் மிக்க நிலப்பரப்புகளையும் கபளீகரம் செய்வதற்கு, கழுகுகள் எம்மைச் சுற்றி வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வறிய மாணவர்களுக்க சைக்கிள்கள் வழங்கும் நிகழ்வு, கிளிநொச்சியிலுள்ள அறம் செய் அறக்கட்டளை நிலைய அறநெறிப் பாடசாலை மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதன்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
'தமிழர்களின் பாரம்பரிய பூமிகளையும் வாழ்விடங்களையும் வளம் மிக்க நிலப்பரப்புகளையும் கபளீகரம் செய்வதற்கு கழுகுகள் எம்மைச் சுற்றி வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன. நாமோ எதையும் உணராதவர்களாக வாளா மடந்தைகளாக சிறு சிறு மகிழ்ச்சிக் கேளிக்கைகளில் மூழ்கி இருக்கின்றோம்.
வன்னிப் பிராந்தியத்தில், தமிழர்களின் குடியிருப்புகள் கேள்விக் குறியாக்கப்படுவதற்கான முத்தாய்ப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு எனும் தலைப்பின் கீழ் இரகசியமாகவும், தூர நோக்குடனும் முன்னெடுக்கப்பட்டு வருவது எம்மால் உணரக்கூடியதாக உள்ளது. ஆனால் அதனை எந்த அளவுக்கு எம்மால் கட்டுப்படுத்த முடியும் என்பது கேள்விக் குறியாக உள்ளது.
இந்த இரகசிய நிகழ்வுகளை கட்டுப்படுத்துவதற்கும் தடுத்து நிறுத்துவதற்கும் எம்மால் முடிந்த வரையில் அல்லும் பகலும் முயன்று வருகின்றோம். எமது முயற்சிகளுக்கு அவ்வப்பகுதிகளில் உள்ள மக்களின் உதவி ஒத்தாசைகள் அவசியம் தேவைப்படுகின்றன எனவும் தெரிவித்தார்.