ம.இளஞ்செழியன் திருகோணமலைக்கு இடமாற்றம்: யாழுக்கு சசி மகேந்திரன்!
11 May,2018
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கை விசாரித்த ட்ரயல் அட் பார் குழுவிலிருந்த மேல் நீதிமன்ற நீதிபதிகள் பாலேந்திரன் சசிமகேந்திரன், அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகிய மூவருக்கும் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் அவர்களின் இடமாற்றத்துக்கான உத்தியோகபூர்வ கடிதத்தை இன்று (11) வெள்ளிக்கிழமையே பிரதம நீதியரசர் வழங்குவார் எனத் தெரிகிறது.
வருடாந்த இடமாற்றத்தின் கீ்ழ் மூன்று ஆண்டுகள் ஒரே மாகாண மேல் நீதிமன்ற அமர்வில் கடமையாற்றியதன் அடிப்படையில் நாடு முழுவதும் மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்கப்படுகிறது. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக மாற்றம் பெற்றுள்ளார்.
திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாக மாற்றம் பெற்றுள்ளார். வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியாக மாற்றம் பெற்றுள்ளார். மேல் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற திருமதி சிறிநிதி நந்தசேகரன், கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுகிறார். அத்துடன் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக என்.எம்.எம் அப்துல்லா நியமிக்கப்படுகிறார். சட்டமா அதிபர் திணைக்கள மூத்த அரச சட்டவாதி டெனிஸ் சாந்தன் சூசைதாஸன், கல்முனை மற்றும் மட்டக்களப்பு குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றங்களின் நீதிபதியாக நியமிக்கப்படுகிறார். அவருடன் இணைந்து கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி சிறிநிதி நந்தசேகரனும் கடமையாற்றுவார்.