தமிழ் உறவுகளுக்கு எதிரான செயற்பாட்டாளர்களாக இராணுவத்தை பார்க்க வேண்டாம்
28 Mar,2018
தமிழ் உறவுகளுக்கு எதிரான செயற்பாட்டாளர்களாக இராணுவத்தை பார்க்க வேண்டாம் என்று இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
மனித் நேய செயற்பாட்டாளர்களான மோகனசங்கர் - வதனி தம்பதியின் நிதி பங்களிப்பில் வறிய, போரால் பாதிக்கப்பட்ட, பெண் தலைமைத்துவ குடும்பங்களை சேர்ந்தவர்களின் சுய தொழில் மேம்பாட்டுக்காக தையல் இயந்திரங்களை கடந்த புதன்கிழமை சம்பிரதாயபூர்வமாக கையளித்து வைத்தபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.
இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்டு வரவேற்புரை ஆற்றியபோது இவர் மேலும் தெரிவித்தவை வருமாறு-
நாட்டில் ஆயுத மோதலை முடிவுக்கு கொண்டு வரவும், அதன் மூலமாக அமைதியை நிலைநாட்டவுமே இராணுவம் யுத்தத்தில் ஈடுபட்டது. மாறாக தமிழ் மக்கள் மீது கோபம், பகைமை, போட்டி கொண்டு இந்த யுத்தத்தை இராணுவம் முன்னெடுத்து இருக்கவில்லை. நாட்டில் இடம்பெற்ற 30 வருட கால யுத்தத்தின்போது அமைதி, இழந்து, ஒற்றுமை இன்றி நாம் அனைவரும் அல்லல் பட்டு இருந்தோம். யுத்தம் அற்ற இன்றைய அமைதி சூழலில் நல்லிணக்கம், ஐக்கியம், சமாதானம் ஆகியவற்றை யாழ்ப்பாணத்தில் கட்டி எழுப்புகின்ற வேலை திட்டங்களை இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகம் மிகுந்த அர்ப்பணிப்புடன் மேற்கொண்டு வருகின்றது.
தமிழ் மக்களுக்கு மாத்திரம் அன்றி முன்னாள் போராளிகளுக்கும் அவர்களுடைய வாழ்வாதாரம், வாழ்க்கை தரம், பொருளாதாரம், தொழில் வாய்ப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்துகின்ற வேலை திட்டங்கள் பலவற்றையும் முன்னெடுத்து வருகின்றோம். இத்திட்டங்கள் மூலமாக பயனாளிகள் உச்ச பலனை பெற்று அவர்களின் வாழ்க்கையை சகல விதங்களிலும் உயர்த்த வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பு ஆகும்.
இவ்வைபவத்தில் அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் சங்க பிரதிநிதிகளும் விசேட அழைப்பின் பேரில் கலந்து கொண்டிருந்தனர்.
- மல்லிகைத்தீவு நிருபர் -