தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்தார்.
யாழ்.மாட்டீன் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசு கட்சி அலுவலகத்தில் இன்று (14) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாம் எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடாத்தவில்லை. நாம் சொல்லியிருந்த அந்த முறையை ஏற்றுக்கொண்ட பல நடுநிலையாளர்கள் வேறுகட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தியிருக்கின்றார்கள்.
அதன் பிரதிபலனாகவோ என்னவோ, யாழ்.மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் இரு கட்சிகள் தாமும் அதே நிலைப்பாட்டில் இருப்பதாக அறிக்கைகள் விடுத்துள்ளார்கள். அது வரவேற்கத்தக்கது.
அவ்வாறான சுமூகமான சூழ்நிலையில், விரைவாக எந்த தங்குதடையுமின்றி, அனைத்து சபைகளுக்குமான நிர்வாகம் உருவாக்கப்படுமென்று எதிர்பார்க்கின்றோம்.
மக்கள் சரியாக வாக்களித்துள்ளார்கள். தேர்தல் முறையில் உள்ள குளறுபடி காரணமாக நிர்வாகங்களை அமைக்கமுடியாத சூழ்நிலைக்கு நாம் இடமளிக்கக்கூடாது.
அதனை சீர் செய்து மிக விரைவாக ஒவ்வொரு சபையும், அந்தந்த உள்ளுராட்சி அதிகார சபைகளில் கொடுக்கப்பட்ட பொறுப்புக்களை எல்லா ஒத்துழைப்புக்களையும் நடவடிக்கைகளையும் செய்வோம்.
மாநகர சபையில், கூடதலாக எண்ணிக்கை கொண்ட கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு. மாநகர சபையினைப் பொறுப்பேற்க வேணடியது தமிழ் தேசிய கூட்டமைப்பு. அந்த அடிப்படையில் தான் செயற்படுகின்றோம்.
இவ்வாறு தான் இருக்க வேண்டுமென்று ஏனைய இரு கட்சிகளும் அறிக்கை வெளியிட்டுள்ளதைப் பார்த்திருக்கின்றோம். ஆகையினால் அதில் குளறுபடி இருக்குமென நினைக்கவில்லை. இவ்இரு கட்சிகளும் தமது எதிர்பார்ப்பினை ஏற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்க்கின்றோம்.
எமது யோசனையினை முன்வைத்த பின்னர், இது நல்ல யோசனை எதிர், நடுநிலையாளர்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றைய இரு கட்சிகளுடனும் பேசியது எமக்குத் தெரியும். அதன்பிரதிபலனாகத் தான் ஏனைய இரு கட்சிகளும், அவ்வாறான நிலைப்பாட்டிற்கு வந்துள்ளார்கள் போன்று தோன்றுகின்றது.
நடுநிலையாளர்கள் எம்மோடும் அது தொடர்பில் பேசியிருக்கின்றார்கள். பொது இணக்கப்பாட்டிற்கு வருவதைப் போன்று தோன்கின்றது. அவ்வாறு இல்லாமல், சபைகளை அமைப்பதும், வேலை செய்வதும், கடினமானதாக இருக்கும் ஆகையினால், பொறுப்போடு அனைத்துக் கட்சியினரும் செயற்படுவார்கள் என எதிர்பார்க்கின்றோம் என்றார்.