எமது மக்கள் வாக்களிக்கக் கூடாது’
09 Feb,2018
“எமது மக்கள் வாக்களிக்கக் கூடாது” என வவுனியாவில் சுழற்சி முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று (09) தெரிவித்துள்ளனர்.
வவுனியா பிரதான தபாலகத்துக்கு அருகாமையில் 351 ஆவது நாளாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், ‘காணாமல் போனோரை எங்கும் தேடி பார்த்தோம். காணவில்லை’ என ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து விசேட வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், இருநாட்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டோரை தேடியறியும் சங்கத்தின் தலைவி கி.ஜெயவனிதா கருத்து தெரிவிக்கையில்,
“ஜனாதிபதி, வாக்குக் கேட்பதுக்காக வடக்குக்கு வந்து, எமது போராட்டத்துக்கு எதிரான கருத்தை தெரிவித்துச் சென்றுள்ளார். அவருடன் இடம்பெற்ற பேச்சுக்களில் சுமந்திரன் உட்பட 3 மக்கள் பிரதிநிதிகள் வருகை தந்து எமது பேச்சுக்களை குழப்பியிருந்தனர்.
இவர்களினை நம்பி பயன் இல்லை. எனவே சர்வதேசமே எமக்கான தீர்வைப் பெற்றுத்தர வேண்டும்.
அத்துடன் ஒரு வருடமாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் எம்மைப்பற்றி கரிசனை கொள்ளாது, இடம்பெறும் தேர்தலில் எமது மக்கள் வாக்களிக்க செல்லக்கூடாது. அவ்வாறு சென்றால் மக்களும் எமக்கு துரோகம் செய்தவர்களாவர்” என அவர் தெரிவித்தார்.