புதுடில்லியிலிருந்து முதலீட்டாளர்கள் குழுவொன்று நேற்று திருகோணமலைக்கு விஜயம் செய்தனர்
28 Jan,2018
திருகோணமலை கோணேஸ்வரா இந்து ஆலயத்தை தரமுயர்த்தி ஆசியாவியாவின் தலை சிறந்த இந்து வணக்கஸ்தலமாக தரமுயர்த்துவது தொடர்பில் ஆராய்வதற்காக இந்தியா புதுடில்லியிலிருந்து முதலீட்டாளர்கள் குழுவொன்று நேற்று (27) சனிக்கிழமை விஷேட விமானம் மூலம் திருகோணமலைக்கு விஜயம் செய்தனர்.
கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவின் வழிகாட்டலில் ஆசியாவின் தலை சிறந்த இந்து வணக்கஸ்தலமாக திருகோணமலை கோணேஸ்வரா ஆலயத்தை தரமுயர்த்தி யாத்திரிகர்களுக்கான உட்கட்டுமான வசதிகளை அதிகரித்து இந்தியா மற்றும் பல நாடுகளிலிருந்தும் யாத்திரிகர்கள் எமது நாட்டிற்கு வருவதை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்தின் ஓர் அங்கமாக இந்தியா புதுடில்லியைச்சேர்ந்த திரு.உதய தேஷாய் மற்றும் பிரவீன் அக்றவால் உட்பட 14 பேர் கொண்ட குழுவினர் விஷேட விமானம் மூலம் திருகோணமலை சீனக்குடா விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இக்குழுவினர் திருக்கோணேஸ்வரா ஆலயத்தில் விஷேட வழிபாடுகளில் கலந்து கொண்டதோடு இவ்வாலயத்தினை உலகளாவிய ரீதியில் வசிக்கும் இந்துக்களின் வணக்கஸ்தலமாக மேம்படுத்துவது குறித்தும் ஆராய்ந்தனர்.
அத்துடன் இக்குழுவினர் திருகோணமலையில் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய பிரதேசங்களை பார்வையிட்டதுடன் இம்மாவட்டத்தின் முதலீடுகளை மேற்கொள்வது குறித்தும் ஆராய்ந்தனர்.
இதில் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலக அதிகாரிகள் கிழக்கு மாகாண சுற்றுலாப்பணியக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.