பேத்தியை பிரிந்த தாத்தா ஒரு வாரத்திற்குப் பின் மரணம்
10 Jan,2018
யாழ்ப்பாணம் – நீர்வேலி பகுதியில் 2ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
நீர்வேலி – அத்தியார் இந்துக் கல்லூரிக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் 6 வயதுச் சிறுமியும், முச்சக்கரவண்டியின் சாரதி ஒருவரும் உயிரிழந்திருந்தனர்.
மேலும் இருவர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இதன்போது, உயிரிழந்த சிறுமியின் தாத்தாவான 65 வயதுடைய துரைசிங்கம் என்பவரும் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்ற ஹயஸ் வாகனமானது முன்னால் சென்ற வாகனமொன்றை முந்தி செல்ல முற்பட்ட போது, பருத்தித்துறையில் இருந்து யாழ்.நோக்கி வந்து கொண்டிருந்த முச்சக்கரவண்டியை மோதி தள்ளியது.
இதில், வடமராட்சி, கற்கோவளம் கிராமத்தைச் சேர்ந்த 6 வயதான ராஜ்குமார் டனிஸ்ரா மற்றும் 57 வயது நிரம்பிய சிங்காரவேலு பாஸ்கரன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தனர்.
ராஜ்குமார் டனிஸ்ரா என்ற சிறுமி முதன்முறையாக பாடசாலைக்கு சென்ற போதே இந்த சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில் பேத்தியை பிரிந்த தாத்தாவும் ஒரு வாரத்திற்குப் பின் இன்று உயிரிழந்துள்ளார்.
விபத்தில், ஹயஸ் ரக வாகனத்தின் சாரதி கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.