மூதூரில் சுற்றிவளைப்பு,மணல் அகழ்வில் ஈடுபட்ட எட்டுப் பேர் கைது,6 டிப்பர் 2 உழவு இயந்திரங்கள் கைப்பற்றல்.
03 Jan,2018
திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெள்ளைநாவல் பகுதியில் மேற் கொண்ட சுற்றி வளைப்பின் போது சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட 08 சாரதிகளை கைது செய்துள்ளதாகவும், 06 டிப்பர் வாகனங்கள், 02 உலவு இயந்திரங்களையும் கைப்பற்றியுள்ளதாக மூதூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பத்மநாத தெரிவித்தார்.
இச்சுற்றி வளைப்பு நேற்றிரவு (02) இரவு மேற் கொள்ளப்பட்டுள்ளது.
மண் அகழ்வு அனுமதிப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை மீறி வெள்ளைநாவல் காட்டுப்பகுதியில் மணல் அகழ்வு இடம் பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இச் சுற்றி வளைப்பு மேற் கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் இவர்களை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மூதூர் பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.