மாவீரர் நாள் கூட்டங்களுக்கான தடையை நீக்கியது உயர் நீதிமன்றம்!
24 Nov,2017
கோவை, சேலம் மாவட்டங்களில் போலீஸால் தடைவிதிக்கப்பட்ட மாவீரர் நினைவேந்தல் நிகழ்ச்சிகளுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
தமிழீழ விடுதலைக்காகப் போரிட்டு மரணமடைந்த போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும்வகையில், தமிழகமெங்கும் ஈழ ஆதரவு அமைப்புகளின் சார்பில் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டுவருகின்றன. கோவை சுந்தராபுரம், பொள்ளாச்சி சாலையில் வரும் 27ஆம் தேதியன்று மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நடத்த தமிழ்த்தேச மக்கள் கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர்கள் தமிமுன் அன்சாரி, தனியரசு, பி.யு.சி.எல் முன்னாள் தலைவர் பொன்.சந்திரன் ஆகியோர் உட்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொள்கின்றனர். ஆனால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்றும் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஆகும் என்றும் கூறி, கூட்டம் நடத்த அனுமதிக்க போலீஸ் மறுத்துவிட்டது.
அதை எதிர்த்து தமிழ்த்தேச மக்கள் கட்சியின் கோவை நிர்வாகி சிவபாலன் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ். ரமேஷ், போலீஸாரின் தடையை நீக்கியும் கூட்டத்துக்கு அனுமதியளித்தும் உத்தரவிட்டார். இதைப்போலவே, சேலம் மாவட்டம் கொளத்தூரில் திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில், அதே நாளில் நடத்தப்படவுள்ள மாவீரர் வீரவணக்க நிகழ்வுக்கும் சட்டம் ஒழுங்குப் பிரச்னை எனக்கூறி கொளத்தூர் போலீஸ் அனுமதி மறுத்தது. அதை எதிர்த்து தி.வி.க நகரச்செயலாளர் சி.ராமமூர்த்தி சார்பில் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டனர். மனுவை விசாரித்த நீதிபதி ரமேஷ், தடைவிதித்ததற்கு போலீஸ் கூறிய காரணங்களை நிராகரித்து, கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.