திருகோணமலை, குச்சவெளி சிரமதானப் பணிகளுக்கு பொலிஸார் முட்டுக்கட்டை!
21 Nov,2017
திருகோணமலை, குச்சவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டிருந்த சிரமதானப் பணிகள் குச்சவெளிப் பொலிஸாரினால் இடை நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
தேசிய மாவீரர் நாள் நினைவேந்தலினை முன்னிட்டு, குச்சவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுமக்கள், முன்னாள் போராளிகள், மற்றும் மாவீரர் குடும்பங்கள் ஒன்றிணைந்து இன்றைய தினம் சிரமதானப்பணியினை முன்னெடுத்திருந்தனர்.
இதன் போது அங்கு சென்ற குச்சவெளிப் பொலிஸார் அனைவரையும் திருப்பி அனுப்பியுள்ளனர்.இதுகுறித்து, புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட நபர்களின் ஒன்றியத்தின் தலைவர் க.இன்பராசா தெரிவிக்கையில்,
”கடந்த 12ம் திகதி சட்ட ரீதியாக ஆலங்குளம் துயிலுமில்ல சிரமதானப் பணிக்காக அனுமதிகள் பெற்று பிரதேச மக்களின் ஆதரவுடன் செயற்குழு அமைக்கப்பட்டு சிரமதானப் பணியை ஆரம்பித்துள்ளோம். தற்போது குச்சவெளி செம்பிமலை துயிலுமில்லத்திற்கு தடை உத்தரவு செய்யப்பட்டுள்ளது. இச்செயற்பாடுகள் அனைத்தும் இந்த நல்லாட்சி என கூறிக்கொள்ளும் அரசாங்கத்தின் கீழ் தான் நடைபெறுகின்றது. நான் முன்பு கூறியது போல் சில இடங்களுக்கு அனுமதியும் சில இடங்களுங்கு அனுமதி மறுப்பும் இது எப்படி ஏற்றுக்கொள்வது?”
என்று மேற்படி ஒன்றியத்தின் தலைவர், கந்தசாமி இன்பராசா குறிப்பிட்டார். மேற்படி விடயம் தொடர்பாக தகுந்த ஆலோசனையின் பேரில் நடவடிக்கையினை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.