யாழ். இளைஞனுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு!
04 Oct,2017
அவுஸ்திரேலியாவின் மானுஸ் தீவில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் தற்கொலை செய்த நிலையில் உயிரிழந்ததாக நேற்று தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் குறித்த தமிழ் இளைஞன் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுக்கு முகங்கொடுத்திருந்ததாக த கார்டியன் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த 32 வயதான ரஜீவ் ராஜேந்திரன் என்ற இளைஞனே இந்த குற்றச்சாட்டுக்கு முகங்கொடுத்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் மானுஸ் தீவிலுள்ள விடுதியில் இளம் யுவதி ஒருவரை பல தடவைகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்த குற்றச்சாட்டை அகதிகள் நடவடிக்கை கூட்டணியின் ஊடகத்தொடர்பாளர் Ian Rintoul உறுதி செய்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட யுவதி தப்பியோட முயன்ற போது, அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு முன்பாக ஆற்றுக்கு அருகில் மயங்கி விழுந்துள்ளார்.
இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. எனினும் இந்த குற்றச்சாட்டை ராஜேந்திரன் மறுத்ததாக Ian Rintoul தெரிவித்துள்ளார்.
தற்கொலைக்கு முயன்ற குறித்த அகதி மனுஸ் தீவில் உள்ள Lorengau வைத்தியசாலையில் நேற்று அதிகாலை உயிரிழந்தார் என அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களம் உறுதி செய்துள்ளது.
எனினும் உயிரிழந்தவரின் உடலை இலங்கைக்கு அனுப்புவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. உடலை நாட்டுக்கு அனுப்பு 7500 டொலர்கள் செலுத்துமாறு அவுஸ்திரேலிய அரசாங்கம் கோரியுள்ளது.
ஆனால் எதுவித குழப்பமும் இன்றி இலவசமாக உடலை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது