தலைவர் உயிரோடு இருக்கும் போதே கொல்லப்பட்ட பொட்டம்மான்! இராணுவத்தினரோடு 45 நிமிடங்கள் போராடிய பிரபாகரன்!
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதிக் கட்டப்போரில் இராணுவத்தினருடன் 45 நிமிடங்களாக போராடினார் என மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு அவர் வழங்கிய பேட்டியின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவ் ஊடகத்திற்கு அவர் வழங்கிய நேர்காணலின் ஒரு பகுதி,
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் 2009 மே 19ஆம் திகதி காலை 9.30 மணியளவில் தொடங்கி 45 நிமிடங்கள் இராணுவத்தினரோடு கடுமையான போரில் ஈடுபட்டார்.
எனினும் தொடர்ந்து நீடித்த போரின் போது எமது படைப்பிரிவான 5வது விஜயபாகு படைப்பிரிவினால் கொல்லப்பட்டார்.
இறுதிக் கட்டப்போரின் போது பிரபாகரன் மட்டுமல்லாது, கடற்புலிகளின் தளபதி சூசை, புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான், தளபதி பானு, உள்ளிட்டவர்களும் கொல்லப்பட்டிருந்தனர்.
இதேவேளை, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கும் போதே புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் கொல்லப்பட்டார்.
ஆனால் பொட்டம்மான் கொல்லப்பட்டு அடுத்த நாளே பிரபாகரனும் களத்தில் கொல்லப்பட்டார். இதை நான் உறுதியாக கூறுகின்றேன்.
எவ்வாறெனினும் அவர் தப்பியோடி வெளிநாடு ஒன்றில் வாழ்ந்து வருவாரானால் நிச்சயமாக இப்பொழுது வெளியே வந்திருப்பார் என்றார் கமால் குணரட்ன.
இதேவேளை பிரபாகரனின் மகன்கள் குறித்து, கருத்து வெளியிட்ட கமால் குணரட்ன, பிரபாகரனின் மூத்த மகன் சாள்ஸ் அன்ரனி, கெமுனுவோச் படைப்பிரிவுடனான சண்டையில், 2009 மே 18ஆம் நாள் கொல்லப்பட்டார் என்பதை உறுதிப்படுத்துகின்றேன். அதை நான் நன்கு அறிவேன்.
எனினும், பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் என்னவானார் என்பது குறித்து எனக்குத் தெரியாது என்றும் பதில் அளித்துள்ளார்.
ஆனால் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள ஆவணப்படத்தில் இராணுவத்தினரிடத்தில் சரணடைந்த பின்னரே பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டார் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.