சுதந்திரக் கட்சியின் திருத்தங்களுக்கு சம்பந்தன் எதிர்ப்பு!
13 Jan,2016
சுதந்திரக் கட்சியின் திருத்தங்களுக்கு சம்பந்தன் எதிர்ப்பு!
புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நோக்கில் பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்த திருத்தங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்ப்புத் தெரிவித்தார்.
புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நோக்கில் பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்த திருத்தங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்ப்புத் தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழித்தல், விருப்பு வாக்கு முறையை நீக்கி நியாயமான பிரதிநிதித்துவ தேர்தல் முறையை உறுதி செய்தல், தேசிய பிரச்சினைக்கு அரசியலமைப்பு ரீதியான தீர்வொன்றை வழங்கக்கூடிய வகையிலும் நல்லிணக்கத்தை மேம்படுத்தக் கூடிய வகையிலும் புதிய அரசியலமைப்பொன்று தயாரிக்கப்பட வேண்டும் என்ற விடயங்களை நீக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி திருத்தம் முன்வைத்தது. இந்தத் திருத்தங்களை சுதந்திரக் கட்சி சார்பில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் நேற்று முன்வைத்தார்.
இதன்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் இந்தத் திருத்தங்களுக்கு தனது ஆட்சேபனையை வெளியிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நீக்கக் கோரும் விடயங்களே குறித்த பிரேரணையின் அடிப்படையானவை என்றும், இவற்றுக்கு இணங்கியே பிரேரணைக்கு ஆதரவு வழங்க தான் முன்வந்ததாகவும் தெரிவித்தார். அவற்றை நீக்குவதானது பிரேரணையின் அடிப்படையை நீக்குவதாக அமைந்துவிடும் என்றும் சுட்டிக்காட்டினார்.
எனினும், தமது கட்சியின் நிலைப்பாட்டை தாம் முன்வைத்திருப்பதாகவும், அதனை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதும் அரசைப் பொறுத்தது என்றும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறினார். எனினும், சகலரும் இணங்கிக்கொள்ளக் கூடிய அரசியலமைப்பொன்றைத் தயாரிப்பதே அடிப்படையான தேவையாக உள்ளது என்றும் கூறினார்.
இதன்போது குறுக்கிட்ட சபை முதல்வர், அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல, இந்தத் திருத்தம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினுடைய தீர்மானம் என்றும், இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு வரலாம் என்றும் தெரிவித்தார்.