இந்த நரிக்கு புளிக்கிறதாம்அந்தப்பழம்!
30 Apr,2015
மருண்டவன் கண்ணிற்கு இருண்டதெல்லாம் பேய் என்ற ரீதியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பேசியிருக்கிறார். அண்மையில் கொண்டுவரப்பட்ட 19வது திருத்தச்சட்டம் தன்னை மனதில் வைத்துத்தான் கொண்டு வரப்பட்டுள்ளதாம். இப்பொழுது அடிக்கடி கோயில் குளமென்று விசிற் அடித்துக் கொண்டு திரியும் மகிந்த, விகாரையொன்றில் இதனை தெரிவித்துள்ளார். தனக்கு பயந்து அவர்கள் 19ஐ கொண்டு வந்தபோதும், இனியொரு போதும் நான் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த 100 நாளில் பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டுவிட்டதென்றும், அபிவிருத்தி திட்டங்கள் நிறுத்தப்பட்டு விட்டதென்றும் குற்றம்சாட்டியுள்ளார். பசில் ராஜபக்சவின் கைது பற்றி பேசும்போது, அதொரு பழிவாங்கல் என்றார்.
“அவர் சில துணிகளை பெற்றுக்கொடுத்தார் என்றே குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்தவகையில் நாடு சென்றால், இனிவரும் காலங்களில் அதிகாரிகள் தமது கடமையை செய்யவே பயப்பிடுவார்கள்” என்றும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி பதவியின் அதிகாரங்கள் குறைக்கப்படுவதால், மகிந்த பிரதமர் பதவியை குறிவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.