கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான பகீரதிக்கு 90 நாள் தடுப்புக்காவல்
06 Mar,2015
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான பகீரதிக்கு 90 நாள் தடுப்புக்காவல்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கடந்த திங்கட்கிழமையன்று கைது செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் கடற்புலி மகளிர் அணி தலைவி முருகேசு ஜெயகணேஸ் பகீரதியை 90 நாட்கள் காவலில் வைத்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
41வயதான பகீரதியும் அவரது 8 வயது மகளும் இலங்கையின் வன்னி பரந்தனுக்கு வந்து மீண்டும் பிரான்ஸிக்கு திரும்புவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு சென்றிருந்தபோது கைது செய்யப்பட்டனர்.
இதன்பின்னர் அவர்கள் 72 மணித்தியால ஆரம்பக்கட்ட விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டனர். இதனையடுத்து மேலதிக விசாரணைகளுக்காக 90 நாள் காவல் உத்தரவை பெற்றுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் விசாரணையை விரைவில் முழுமைப்படுத்த முடியும் என்று தாம் நம்புவதாகவும் பொலிஸ் தரப்பு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை தமது பிரஜையின் கைது தொடர்பில் பிரான்ஸ் தூதரகம் சட்ட உதவிகளை வழங்கி வருகிறது. எனினும் அது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.
இலங்கை பொலிஸ் தரப்பு தகவலின்படி, பகீரதி 1997முதல் 2000ஆண்டு வரை விடுதலைப் புலிகளின் கடற்புலி பிரிவில் தீவிர உறுப்பினராக இருந்துள்ளார்.
எனினும் 2005ஆம் ஆண்டு காலப்பகுதியில் அவர் பிரான்ஸிக்கு சென்றுவிட்டார் என்று தெரியவந்துள்ளது.
தொடர்புடைய செய்தி- கட்டுநாயக்க விமான நிலையத்தில் புலிகளின் பெண் கடற்புலி தளபதிகளில் ஒருவர் மகளுடன் கைது