விசாரணை அறிக்கையைத் தாமதப்படுத்தும் விவகாரம் பிடிகொடாமல் நழுவும் அமெரிக்கா
13 Feb,2015
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நாவின் விசாரணை அறிக்கையைத் தாமதப்படுத்துவதும்
விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டியது ஐ.நா மனித உரிமை ஆணையாளரே என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஐ.நா விசாரணை அறிக்கையைத் தாமதப்படுத்துமாறு சிறிலங்கா கோரியுள்ள நிலையில், நேற்று முன்தினம் வொசிங்டனில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியைச் சந்தித்திருந்தார் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர.
இந்தச் சந்திப்பில், அறிக்கையைத் தாமதிப்பது குறித்துப் பேசப்பட்டதா என்று நேற்று வொசிங்டனில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ஜென் பசாகியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், “நிச்சயமாக இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால், இந்த விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டியவர் ஐ.நா மனித உரிமை ஆணையாளரே.
இந்த செயல்முறையில் அவர் மீது உறுதியான நம்பிக்கை வைத்துள்ளோம்.” என்று தெரிவித்தார்.
இந்த அறிக்கையை ஐ.நா தாமதிப்பதை விரும்புகிறீர்களா என்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர், இதுகுறித்து இலங்கையர்களுடனும், ஐ.நாவுடனும், தனிப்பட்ட ரீதியில் பேசிக் கொண்டிருக்கிறோம் என்று குறிப்பிட்டார்.
அதேவேளை, நேற்று வொசிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அறிக்கையைத் தாமதப்படுத்தும் விவகாரத்தில், அமெரிக்காவின் ஆதரவை ஜோன் கெரி வெளிப்படுத்தவில்லை என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது