வேலுப்பிள்ளை பிரபாகரன் இராணுவத்தால் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டது உறுதி:
19 Dec,2014
எனது கணவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டு பிடிக்கப்பட்டார் ஆனால் இதுவரை எந்த தொடர்புமில்லை என ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியமளித்தார் அவரது மனைவி.
ஆணைக்குழுவின் இறுதி நாள் அமர்வு இன்று புதன்கிழமை வவுனியா பிரதேச செயலகத்தில் நடைற்றது.
அதில் சாட்சியமளித்த பிரபாகரனின் மனைவி பாலேஸ்வரி, நாங்கள் வவுனியா ஈச்சங்குளத்தில் வசித்து வந்தோம். பின்னர் இடம்பெயர்ந்து கிளிநொச்சி முரசுமோட்டைப் பகுதியில் குடியேறிய போது எனது கணவர் தொழிலுக்காக வேறு பலருடன் முகமாலைக்குச் சென்றார்.
கடந்த 2006.09.09 அன்று எனது கணவர் முகமாலையில் வேலை செய்துகொண்டிருந்த சமயம் அப்பகுதியை இராணுவத்தினர் சுற்றிவளைத்து அங்கு நின்றவர்களை கைது செய்து சென்றனர் என்று அவருடன் வேலை செய்தவர்கள் மீண்டு வந்து தெரிவித்தனர்.
யுத்தம் முடிந்த பின்னர் 2010 ஆம் ஆண்டு பொலிஸ்நிலையம், மனித உரிமை ஆணைக்குழு என்பவற்றில் நான் முறையிட்டேன். மனித உரிமை ஆணைக்குழுவில் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற பெயருடைய ஒருவர் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் இருக்கிறார் என்று பட்டியல் ஒன்றைக் காண்பித்தனர்.
எனினும் பின்னர் சில நாட்களில் அவ்வாறு எவரும் இல்லை என மறுத்துவிட்டனர். என்றார் அந்தப் பெண். இதன்போது முகமாலை யாருடைய கட்டுப்பாட்டில் அப்போது இருந்தது என ஆணைக்குழுவினர் கேட்டதற்கு இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது என்றார் அந்தப் பெண்.