சனல்- 4 நிகழ்ச்சிப் பணிப்பாளர் மனைவியுடன் கொழும்பில்? - புலனாய்வு தகவல்
23 Sep,2014
பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் சனல்- 4 தொலைக்காட்சியின் நிகழ்ச்சிப் பணிப்பாளர் நேற்று திங்கட்கிழமை காலை இலங்கையை வந்தடைந்துள்ளதாக அரச புலனாய்வுத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்குறித்த பணிப்பாளரான ஜோன் ஸ்டெவார்ட் பிரான்ஸிஸ், கொழும்பு, வெள்ளவத்தை பகுதியிலுள்ள தொடர்மாடிக் குடியிருப்பில் வீடு வாங்கியுள்ளதாகவும், விடுமுறையைக் கழிப்பதற்கு, அவரது மனைவியுடன் இலங்கைக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அவரது மனைவி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2013ம் ஆண்டு இலங்கைக்கு வந்த இவர் பாதுகாப்பு காரணங்களுக்காக, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பீரிஸ்- நிஷா பிஸ்வால் இடையில் சந்திப்பு
இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் மற்றும் அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வாலிற்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசினார்.
இந்தச் சந்திப்பில் இலங்கை பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.