அண்மையில் புகலிடம் தேடிய 157 தமிழ் அகதிகளையும், அவுஸ்ரேலியா நேற்றிரவு இரகசியமாக நௌரு தீவுக்கு அனுப்பியுள்ளது.
கிறிஸ்மஸ் தீவுக்கு அருகே படகு பழுதடைந்த நிலையில், அவுஸ்ரேலியாவிடம் தஞ்சம்கோரிய 157 தமிழ் அகதிகளையும், ஒரு மாதத்துக்கு மேலாக சுங்க கப்பல் ஒன்றில் தடுத்து வைத்திருந்தது அவுஸ்ரேலியா.
இதற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டதையடுத்து, அவுஸ்ரேலியாவின் மேற்குப் பகுதியில் ஒதுக்குப் புறமாகவுள்ள கேட்டின் தடுப்பு முகாமுக்கு கடந்தவாரம் கொண்டு சென்றது.
இந்த அகதிகள், இந்தியாவில் இருந்து புறப்பட்டனர் என்பதால், அவர்களை ஏற்றுக் கொள்ள இந்தியாவும் தயாராகவே இருந்ததாக கூறப்படுகிறது.
இந்திய அதிகாரிகளை இந்த அகதிகளைச் சந்தித்துப் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், அகதிகள் இந்திய அதிகாரிகளைச் சந்திக்க மறுத்து விட்டனர்.
இதையடுத்து, அகதிகளைப் பாதுகாப்பாக இந்தியா செல்வதற்கு ஏற்பாடு செய்வதாக அவுஸ்ரேலியா கூறியது. ஆனால் அகதிகள் அதனை நிராகரித்து விட்டனர்.
இந்தநிலையில், கேட்டின் தடுப்பு முகாமில் இருந்து நேற்றிரவு 9.30 மணியளவில் மூன்று விமானங்கள் மூலம், இந்த அகதிகள் 157 பேரும் நௌரு தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 50 பேர் சிறுவர்களாவர்.
'அகதிகள் இந்தியாவுக்குத் திரும்ப வேண்டும், இல்லாவிட்டால் நௌரு தீவில் குடியேற்றப்படவார்கள், அவுஸ்ரேலியாவில் குடியேற்றப்படமாட்டார்கள் 'என்று நேற்றிரவு அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொறிசன் தெரிவித்திருந்தார்.
'அவர்கள் அகதிகளாக அடையாளம் காணப்பட்டாலும், நௌருவில் தான் குடியேற்றப்படுவர், அவுஸ்ரேலியாவில் அல்ல.
அகதிகளல்ல என்று காணப்பட்டால், சிறிலங்கா அல்லது இந்தியாவுக்குத் திரும்ப வேண்டும்' என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையிலேயே நேற்றிரவு 157 அகதிகளையும் நௌரு தீவுக்கு அவுஸ்ரேலியா இரகசியமாக அனுப்பி வைத்துள்ளது.
ஈழ ஏதிலிகள் சிலர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர் – சாரா ஹன்சன் யங்
அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரி சென்ற அகதிகள் ஈழ ஏதிலிகள் சிலர் கடுமையாக துன்புறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பசுமை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாரா ஹன்சன் யங் இதனைத் தெரிவித்துள்ளார்.
157 அகதிகளில் நான்கு பேர் இவ்வாறு கடுமையாக துன்புறுத்தப்பட்டு, இருட்டறை ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாம் கடந்த புதன் கிழமை அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள கேர்ட்டீன் முகாமிற்கு விஜயம் செய்த போது, அவர்கள் துன்புறுத்தப்பட்டமைக்கான ஆதாரங்களை தம்மிடம் காட்டியதாகவும் அவர் கூறியுள்ளார்.
அகதிகள் விவகாரம் அறிய அவுஸ்ரேலியாவுக்குள் புகுந்தனர் இரு புலனாய்வு நிபுனர்கள்
அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியுள்ள ஈழ ஏதிலிகளின் நிலைமை குறித்து புலனாய்வில் ஈடுபடுவதற்காக சர்வதேச அனுபவம் வாய்ந்த இரண்டு புலனாய்வாளர்கள் அவுஸ்திரேலியாவுக்குள் சென்றுள்ளனர்.
சர்வதேச இணையத்தளம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
ஊடகங்களுக்கும், காவற்துறையினரும் அநாமதேயமாக தகவல்களை வழங்கும் விசில்ப்ளோவர்ஸ் எனப்படும் இரண்டு நிபுணர்களே இவ்வாறு இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.
அவுஸ்திரேலியா அரசாங்கம் கிறிஸ்மஸ் தீவு, கொக்கோஸ் தீவு உள்ளிட்ட இடங்களிலும், கற்றீன் போன்ற முகாம்களிலும் அகதிகளை தங்க வைத்திருப்பதோடு, பப்புவா நியுகினியில் உள்ள நவுரு மற்றும் மானஸ் தீவுகளிலும் முகாம்களை நடத்தி அங்கு இலங்கை அகதிகளை தங்க வைத்திருக்கிறது.
அங்கு அவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுப்பதாக தெரிவிக்கப்படுகின்ற போதும், அந்த தகவல்கள் பெரும்பாலும் வெளியில் வருவதில்லை.
இந்த நிலையில் அது குறித்து ஆராய்வதற்காக குறித்த இரண்டு பேரும் அவுஸ்திரேலியா சென்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.