இந்தியாவைப் புறந்தள்ளி எந்த ஒரு தீர்வும் வராது – சுமந்திரன்
இந்தியாவைப் புறந்தள்ளி எந்த ஒரு தீர்வும் வரப்போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்று யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“இந்தியாவைப் புறந்தள்ளி எந்த ஒரு தீர்வும் இந்த நாட்டில் வரப்போவதில்லை என்பது அடிப்படையான விடயம்.
அதற்காக இந்தியா சொல்வது எல்லாவற்றையும் செய்யப்போகின்றோம் என்பதும் எந்தக் காலத்திலும் நடைபெறப்போவதுமில்லை.
எங்களுடைய கொள்கைகளின் அடிப்படையிலேயேதான் தீர்வு வரும்.
ஆனால் அதை இந்தியாவைப் புறந்தள்ளிச் செய்யமுடியாது.
இந்தியாவை நாங்கள் எங்களோடு வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையிலே ஓர் அடிப்படை விடயம் உள்ளது.
ஒரு நாட்டைக் குறிவைத்து நிறைவேற்றுகின்ற எந்தத் தீர்மானத்துக்கும் இந்தியா ஆதரவாக வாக்களிப்பதில்லை.
உதாரணத்துக்கு சிரியாவில் நடைபெறுகிற விசாரணை தொடர்பில் அவர்கள் ஆதரித்து வாக்களிக்கவில்லை.
வடகொரியா விவகாரத்திலும் கூட வாக்களிக்கவில்லை.
அவர்களுடைய பொதுவான கொள்கை ஒரு நாட்டைக் குறிவைத்து நிறைவேற்றுகின்ற தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிப்பதில்லை என்பதாகும்.
ஆனாலும், இரண்டே இரண்டு தடவைகள் அதற்கு விதிவிலக்காகச் செயற்பட்டிருக்கிறார்கள்.
அது இலங்கை சம்பந்தமான 2012, 2013ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்.
அதற்கு காரணம், தமிழ்நாட்டிலே இந்தத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று எழுந்த கோசங்கள்.
ஆகவே அரசியல் காரணங்களுக்காக தங்களுடைய நாட்டின் வெளியுறவுக் கொள்கையிலேயே மாற்றத்தினை ஏற்படுத்தி அந்தத் தீர்மானங்களுக்காக வாக்களித்தார்கள்.
இந்தத் தடவை ஒரு வித்தியாசம் ஏற்பட்டது.
இந்த ஆண்டுத் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாட்டிலே எந்தவிதமான ஆர்ப்பாட்டமோ, கோசமோ இருக்கவில்லை.
இதற்குக் காரணம் இந்தத் தீர்மானம் பிரியோசனமில்லை என்ற பொய்யான பரப்புரையின் பிரதிபலிப்புத்தான் தமிழ்நாட்டில் எந்த அழுத்தமும் ஏற்படாமைக்கான காரணம்.
அத்துடன் அமெரிக்காவுக்கு எதிரான ஊர்வலங்கள் நடத்தப்படுவதற்கும் அதுவே காரணமாகியது.
அமெரிக்க நிறுவனங்களுக்கு கல்லெறிந்தார்கள்.
அவ்வாறான அழுத்தம் இல்லாமை காரணமாகவே இந்தியா தனது சாதாரண வெளியுறவுக்கொள்கையின் அடிப்படையிலே ஒரு நாட்டைக் குறிவைத்து தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு ஆதரவளிக்காமல் இருக்கக் கூடியதாக இருந்தது.” என்று அவர்மேலும் கூறியுள்ளார்.