புலம்பெயர்ந்தவர்கள் மீது சிறீலங்கா ‘புலி’ முத்திரை!பல்லாயிரக்கணக்கானோரின் இலங்கைப் பயணம் ரத்து .
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் எனக் குற்றம்சாட்டி வெளிநாடுகளில் இருந்து செயற்படுகின்ற 16 தமிழ் அமைப்புகளையும் 424 தனிநபர்களையும் இலங்கைக்குள்
நுழைவதற்கு சிறீலங்கா அரசாங்கம் தடைவிதிப்பதாகக் கடந்தவாரம் வர்த்தமானி அறிக்கையன்றை வெளியிட்டிருந்தது. அத்துடன், இந்த அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணுவோரின் சொத்துக்களை அரசுடமையாக்கப்பட உள்ளதாக சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அவர் கடுமையாக எச்சரித்துள்ளார். அத்துடன், தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் அல்லது பயங்கரவாதிகளுடன் தொடர்புகளைப் பேணினால் சட்டத்தை உச்ச அளவில் அமுல்படுத்த நேரிடும் எனவும் அவர் மேலும் கடும் தொனியில் எச்சரித்திருக்கின்றார். தடை செய்யப்பட்ட அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணி வரும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ள இருந்த ஆயிரக் கணக்கான தமிழர்கள் தங்கள் பயணங்களை இடை நிறுத்தியுள்ளதாக தெரியவருகின்றது. இந்தப் பட்டியலில் பெயர் குறிப்பிடாத பலரும் தங்கள் பெயரை வெளியிடாது கட்டுநாயக்கா விமான நிலையத்தில் சென்று இறங்கியதும் கைது செய்யலாம் என்ற அச்சம் காரணமாகவும், சிறீலங்கா வெளியிட்ட பெயர்ப் பட்டியலில் உள்ள பெயர் குறிப்பிடப்பட்டவர்களின் உறவினர்களும் எனப் பல ஆயிரக் கணக்கானவர்கள் தங்கள் பயணங்களை இடைநிறுத்தியுள்ளனர்.
குறிப்பாகப் பரிஸ் தலைநகர் லாச்சப்பலில் மட்டும் சிறீலங்காவிற்கு இம்முறை விடுமுறைக்குப் பயணம் மேற்கொள்வதற்கு விமானத்திற்கான பயண முற்பதிவு செய்திருந்த சுமார் 400 வரையான பயணச் சீட்டுக்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதேவேளை, சுவிச்சற்லாந்து, பிரித்தானியா, ஜேர்மனி மற்றும் கனடா, அவுஸ்திரேலியா நாடுகளிலும் ஏராளமானோர் தங்கள் பயணங்களை இடைநிறுத்தியுள்ளனர். இதேவேளை, இம்முறை விடுமுறையை இலங்கையில் சென்று கழிப்பதற்கு திட்டமிட்டிருந்த பலரும், அதனை மாற்றி வேறு நாடுகளுக்கு பயணம் செய்வதற்கும் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது இவ்வாறிருக்க, பிரான்சில் இருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த சில வருடங்களில் படிப்படியாக அதிகரித்து வருவதாக சிறீலங்கா மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது. சிறீலங்கா சுற்றுலாத்துறை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, ‘ஆசியாவின் அதிசயம்’ என்ற தலைப்பின் கீழ் சிறீலங்காப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாசர நடவடிக்கைகள் காரணமாகவே இது சாத்தியமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கடந்த மாதம் 28ம் திகதி 130 பிரெஞ்சு நாட்டவர்கள் இலங்கை சென்றுள்ளனர்.
இவர்கள் பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சென்றுள்ள இவர்கள் இங்கு முதலீடு செய்வதில் ஆர்வம் கொண்டுள்ளதாகவும் சிறீலங்கா தரப்புச் செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மூதலீடு செய்வது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் அவர்கள் தொடர்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.