நெடுங்கேணியில் கொல்லப்பட்ட தேவிகன் அனுராதபுர, கொலன்னாவ தாக்குதல்களில் பங்கெடுத்த வான்புலி விமானி
நெடுங்கேணியில் நேற்று நடந்த மோதலில் கொல்லப்பட்டதாக சிறிலங்காப் படையினரால் அறிவிக்கப்பட்ட மூன்று பேரில், தேவிகன் என்பவர், விடுதலைப் புலிகளின் வான்புலிகள் அமைப்பின் முக்கியமான விமானி என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
நெடுங்கேணிக்குத் தெற்கே சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ள வெடிவைத்தகல்லு என்ற இடத்தில், நேற்று அதிகாலையில். நடத்தப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதலின் போது, விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மீள உயிர் கொடுக்க முனைந்தவர்கள் என்று கூறி, கோபி, அப்பன், தேவிகன் ஆகிய மூவரையும் சிறிலங்காப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
இவர்கள் மூவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முன்னர் இருந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
இவர்களில் வான்புலிகளின் விமானியான தேவிகன், 2007ம் ஆண்டு நடத்தப்பட்ட அனுராதபுர வான்படைத்தளம் மற்றும் கொலன்னாவ எண்ணெய்க் குதம் என்பனவற்றின் மீதான வான் தாக்குதல்களில் பங்கெடுத்தவர் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.
1995ம் ஆண்டில் விடுதலைப் புலிகளுடன் இணைந்து கொண்ட ராதா படையணியைச் சேர்ந்த கரும்புலியான தேவிகன், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பத்தினரின் பாதுகாப்புக்குப் பொறுப்பாகவும் இருந்தவர்.
போரின் முடிவில் இந்தியாவுக்குத் தப்பிச்சென்ற இவர், பின்னர் ஐரோப்பிய நாடு ஒன்றுக்குச் சென்றதாகவும், அங்கிருந்து அண்மையில் சிறிலங்கா திரும்பியிருந்த்தாகவும் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த ஏனைய இருவரான கோபி மற்றும் அப்பன் ஆகியொர், விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவில் இருந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கோபி போரின் முடிவில் சிறிலங்காப் படையினரால் புனர்வாழ்வுக்குட்படுத்தப்பட்ட பின்னர், சவூதி அரேபியாவுக்குச் சென்று சாரதியாகப் பணியாற்றியவர் என்றும், அங்கிருந்த ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று திரும்பியவர் என்றும் அவர் கூறியுள்ளார்.
நேற்றைய தேடுதல் நடவடிக்கைக்காக சுமார் 2000 சிறிலங்காப் படையினர் நெடுங்கேணிக்குத் தெற்கிலுள்ள காட்டுப் பகுதியில் குவிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
வவுனியா வடக்கில் தமிழ் இராணுவப் புலனாய்வு அதிகாரி கொல்லப்பட்டது எப்படி?
வவுனியா வடக்கில் நேற்றிரவு இராணுவப் பயிற்சியின் போது நடந்த தவறுதலான துப்பாக்கிச் சூட்டில், சிறிலங்கா இராணுவத்தின் 7வது இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் எஸ்.கமல்ராஜா என்ற தமிழ் இராணுவ அதிகாரி பலியானதாக சிறிலங்கா இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
நேற்றிரவு பதவியா மருத்துவமனையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட இவர், சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
சிறிலங்காப் படையினரின் குழுவொன்று, பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, சக படைச்சிப்பாய் ஒருவரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இவர் இலக்காகியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இதுதொடர்பாக விசாரணை இடம்பெற்று வருவதாகவும் சிறிலங்கா இராணுவத் தலைமையகம் கூறியிருந்தது.
முன்னதாக, நெடுங்கேணிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் குழுவொன்றுடன் நடந்த மோதலிலேயே இவர் கொல்லப்பட்டதாக ஊடகங்களில் தகவல் வெளியானது.
ஆனால் பின்னர் அதனை சிறிலங்கா இராணுவம் மறுத்துள்ளது.
எனினும், கோபி, அப்பன், தேவிகன், ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்ட நெடுங்கேணியை அண்டிய வவுனியா வடக்கிலேயே சிறிலங்கா படை அதிகாரியும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
இதனால், இந்தச் சம்பவங்கள் தொடர்பான சந்தேகங்கள் அதிகரித்துள்ளன.