தமிழர் தாயகப்பிரதேசங்களிலிருந்து சர்வதேச தொண்டு நிறுவனங்களை வெளியேற்றி, எமது மக்களை திட்டமிட்ட பட்டினிச்சாவுக்குள் சிறீலங்கா அரசு தள்ளியுள்ளது. வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் சீற்றம்!
தமிழ் மக்களின் தாயகப்பிரதேசமான வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து சர்வதேச தொண்டு நிறுவனங்களை குறுகிய கால அவகாசத்துக்குள் சிங்கள அரசு பலவந்தமாக வெளியேற்றி, தமிழ் மக்களை திட்டமிட்ட பட்டினிச்சாவுக்குள் இட்டு கொன்று கொண்டிருக்கின்றது என வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகன், சிறீலங்கா அரசை கடுமையாக சாடியுள்ளார்.
கடந்த சில வாரங்களாக முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை, புதுக்குடியிருப்பு, தேவிபுரம், வள்ளிபுனம், உடையார்கட்டு, விசுவமடு, மல்லாவி, துணுக்காய், பாண்டியன்குளம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் மக்கள் குறைகேள் சந்திப்புகளை நடத்திய பின்னர், அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே சிறீலங்கா அரசு மீது கடுமையாக இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
அவரது அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத்திட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்டுக்கொண்டிருந்த உணவு வழங்கும் திட்டத்தை, இடம்பெயர்ந்த இலட்சக்கணக்கான எமது மக்கள் தமது சொந்த நிலங்களில் மீளக்குடியேறி, அவர்கள் சுயமாக உழைத்து தமது வாழ்வாதாரத்தை ஸ்திரப்படுத்திக்கொள்வதற்கு முன்னரே நிறுத்தி, நாட்டிலிருந்தே ஐநாவின் பல்வேறு தொண்டு நல அமைப்புகளையும் சிறீலங்கா அரசு பலவந்தமாக வெளியேற்றியுள்ளது.
MSF, UNICEF, UNDP, WORLD FOOD PROGRAMME ஆகிய முக்கிய நிறுவனங்கள் எமது மக்களின் இடர் நெருக்கடி வாழ்வை, அவல வாழ்வை கணிசமான அளவு நிவர்த்தி செய்து வந்த நிலையில், தன்னால் எதையும் செய்ய முடியும் என்ற போர் வெற்றிக்கர்வத்தின் திமிரால் தொண்டு நிறுவனங்களை வெளியேற்றிய மகிந்த அரசாங்கம், ஆசியாவின் நோயாளி எனும் தன்னுடைய உண்மை நிலையை மூடிமறைக்க வறட்டுக்கௌரவத்துக்காக சிறிது காலத்துக்கு மட்டும் தன்னிறைவற்ற நிவாரணத்தை வழங்கி விட்டு தற்போது அதையும் நிறுத்தி எமது மக்களை திட்டமிட்ட பட்டினிச்சாவுக்குள் இட்டு கொன்று கொண்டிருக்கின்றது.
மகிந்த அரசின் இத்தகைய போலி ஏமாற்று மோசடி நடவடிக்கைகளால், சர்வதேச தொண்டு நல நிறுவனங்களால் மனிதாபிமான அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வந்த சுகாதாரம், உளவளம், கல்வி மேம்பாடு, போசாக்கு, சுயதொழில் வாய்ப்புகள், போன்ற நல்ல பல திட்டங்கள் கணிசமான அளவுக்கு குறைவடைந்தும், படுமோசமாக வீழ்ச்சியடைந்தும் பெரும் மனிதப்பேரவலம் எமது மண்ணில் நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கின்றது.
எதிர்காலத்தில் நலிவுற்ற, தேக உள ஆரோக்கியமற்ற ஒரு சமுகம் உருவாகப்போகும் அபாய சூழலை தடுத்து நிறுத்தி, எமது மக்களுக்கான ஊட்டத்தை வடமாகாணசபை ஊடாகவேனும் முன்னெடுப்பதற்கு போதிய நிதியை மத்திய அரசு வழங்காத வங்குரோந்து நிலையில், வாழ்வாதாரமின்றி தவிக்கும் இடம்பெயர்ந்து மீளக்குடியேற்றப்பட்ட மக்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத்திட்ட நிவாரணத்தை வழங்குவதற்கு ஐநா நிறுவனங்களை மீள அழைக்க விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென கடந்த 18.02.2014 அன்று நடைபெற்ற வடமாகாணசபை பேரவை அமர்விலும் பிரேரணை நிறைவேற்றி கோரப்பட்டுள்ளது.
எமது மக்கள் தமது தொழிலை பெருக்கி, தம் வாழ்வாதாரத்தை ஸ்திரப்படுத்திக்கொள்ளும் காலம் உருவாகும் வரை, ஐக்கியநாடுகள் சபை தனது மனிதாபிமான செயல்பாடுகளை தங்கு தடையின்றி சுதந்திரமாக மேற்கொள்ளும் சூழலுடன் கூடியதாகவே இந்த நடவடிக்கைகள் அமைய வேண்டும் எனவும், அவரது அறிக்கையில் வலியுறுத்தி கூறப்பட்டுள்ளது.
கடந்த 18.02.2014 அன்று நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் நகலும், வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகனின் தொலைபேசி இலக்கமும் +094 772093213