மன்னார் கடற்படுகையில் எரிவாயு அகழ்வில் ஈடுபட பாகிஸ்தான் முயற்சி
புதைகுழி குறித்து ஆயர் கோரிக்கை
சிறிலங்கா கடற்பரப்பில், எரிவாயு அகழ்வில் ஈடுபட பாகிஸ்தான் விருப்பம் வெளியிட்டுள்ளது.
மன்னார் கடற்படுகையில், கெய்ன் இந்தியா நிறுவனம் எரிவாயு அகழ்வுக்கான துளையிடும் பணிகளை மேற்கொண்டிருந்தது.
முதற்கட்டமாக துளையிடப்பட்ட இரண்டு இடங்களில், எரிவாயுப் படிமங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
எனினும், துளையிடப்பட்ட இடங்களில் கண்டறியப்பட்டுள்ள எரிவாயு படிமங்கள் வர்த்தக ரீதியான உற்பத்திக்கு ஏற்றதா என்பது தொடர்பாக இன்னமும் சாதகமான அறிக்கைகள் கிடைக்கவில்லை.
இந்தநிலையிலேயே மன்னார் கடற்படுகையில், எரிவாயு அகழ்வில் ஈடுபடுவதற்கு பாகிஸ்தான் விருப்பம் வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவுக்கு இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்ட பாகிஸ்தான் தேசிய சட்டசபையின் சர்தார் அயஸ் சாதிக் இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ளார்.
சீனி உற்பத்தி மற்றும் எரிவாயு உற்பத்தியில் பாகிஸ்தான் நிபுணத்துவம் கொண்டிருப்பதாகவும் இந்த துறைகளில் சிறிலங்காவுடன் இணைந்து செயற்பட விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு மிக நெருக்கமாக உள்ள சிறிலங்காவின் எண்ணெய் வளப் படுகையில் பாகிஸ்தான் நுழைவதற்கு ஆர்வம் காட்டியுள்ளது குறித்து இந்தியத் தரப்பில் இருந்து இருவரை எந்தக் கருத்தும் வெளியாகவில்லை.
மன்னார் புதைகுழி குறித்து அனைத்துலக விசாரணை – மன்னார்
மன்னாரில் திருக்கேதீஸ்வரம் ஆலயத்துக்கு அண்மித்த பகுதியில், கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழி குறித்து அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மன்னார் ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.
திருக்கேதீஸ்வரம் பகுதியில், நீர் விநியோக குழாய் பதிப்பதற்காக குழி தோண்டிய போது, கடந்த வெள்ளிக்கிழமை இந்தப் புதைகுழி கண்டுபிக்கப்பட்டது.
இதையடுத்து மன்னார் நீதிவான் முன்னிலையில் அந்தப் பகுதியைத் தோண்டிய போது, இதுவரை 10 மனித சடல எச்சங்களும், மண்டையோடுகளும் மீட்கப்பட்டன.
மீண்டும் இந்தப் பகுதியில் வரும் சனிக்கிழமை தோண்டும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
அதேவேளை, இந்தப் புதைகுழிப் பகுதியை பாதுகாக்க தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு சிறிலங்கா காவல்துறைக்கு மன்னார் நீதிவான் ஆனந்தி கனகரத்தினம் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள மன்னார் ஆயர் இராயப்பு யொசெப் ஆண்டகை, இந்தப் புதைகுழி தொடர்பாக அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரியுள்ளார்.
இவை போர் காலத்தில் காணாமற்போன பொதுமக்களுடையவையாக இருக்கலாம் என்றும் அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.
போர் முடிவுக்கு வந்த பின்னர் காணாமற்போனவர்கள் குறித்து எந்த முறையான விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை.
இந்தப் புதைகுழி வடக்கில் காணாமற்போனவர்கள் தொடர்பான அனைத்துலக விசாரணைக்கான கண்களைத் திறக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.