மாவீரர்களின் வரலாற்றினை எழுதத் துணிந்தால் அது பாரதத்தைவிட, இராமாயணத்தைவிட பெரியதாக, மிகவலிமைமிக்க வீறுமிக்க காப்பியமாக அமையும் - உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்
மாவீரர் நாளினை உலகெங்கும் வாழ்கின்ற தமிழ்மக்கள் கொண்டாடுகின்றோம். மாவீரர் நாள் தமிழர்களின் வரலாற்றில் மானம் படைத்த நாள். நீண்ட நெடுங்கால இடைவெளிக்குப் பிறகு தமிழர்களின் நிமிர்வினை உலகத்திற்கு பறைசாற்றுகின்ற நாள், மாவீரர்நாள்.
தமிழீழ மண்ணில் முள்ளிவாய்க்கால் வரை ஜம்பதாயிரம் போராளிகள் மாவீரர்களாகியிருக்கின்றார்கள். உண்மையில் தமிழீழ மண் விடுதலைப் போராட்டத்தில் தன் தாயகத்தைக் காப்பதற்காக மிகப்பெரிய உயிர்க்கொடை தந்துள்ளது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. தமிழீழ மண்ணில் விடுதலைப் புலிகள் அந்த வீறுமிக்க போரினை எப்படி எல்லாம் முன்னெடுத்தார்கள். இந்த மாவீரர்நாள் அந்த வீரவரலாறு பேசுகின்ற நாளாக அமைகின்றது.
நான் எண்ணிப்பார்கின்றேன், தரையில் இறந்த மாவீரர்கள் இருக்கின்றார்கள். மண்ணில் இருந்து உண்ணாமல் நோன்பிருந்து உயிரைவிட்ட திலீபன், மண்ணிலேயே போராடி களத்தில் உடல்சிதறி காற்றோடு கலந்த பொன்னமான். இப்படித் தரையில் வீரவரலாறான மாவீரர்கள் எத்தனை பேர். கடலில் மடிந்த மாவீரர்கள் எத்தனை பேர். வானத்தில் மடிந்த மாவீரர்கள். ரூபனும் சிரித்திரனும் போரின் கடைசி வேளையில் வானத்தில் எதிரியை தாக்க குண்டேந்தி பறந்தவர்கள். புலிகளின் வான்படையில் மாவீரர்களாக வானத்தில் அவர்கள் உயிரை விட்டார்கள்.
இவ்வாறு எங்கள் மாவீரர்கள் மாபெரும் வீரம் படைத்தவர்கள். அதுமட்டுமல்ல தாய்நாட்டில் பல்லாயிரக்கணக்கானவர்கள் உயிரை விட்டார்கள். அதுமட்டுமல்ல வெளிநாடுகளில் உயிரை விட்டார்கள். தமிழ் நாட்டில் மாவீரர்களானவர்கள் எத்தனை பேர். தமிழ்நாடு தாண்டி பிரான்சில் கஜன், நாதன் பரிதி இவர்கள் எல்லாம் உலகெங்கும் தங்கள் உயிர்களை தூக்கி எறிந்து மாவீரர்களாய் வீரம் படைத்த வரலாறு தமிழர்களின் வரலாறு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
தமிழீழத்திற்காக, உலகம் அனைத்தும் விடுதலைப் புலிகள் போராடி மாவீரர்களாய் வரலாறு படைத்தார்கள். அதைதான் மாவீரர்களின் வரலாறு நமக்க காட்டுகின்றது. இது ஒரு பெரிய போர். கழுத்தில் நஞ்சை கட்டி போராடும் எந்த விடுதலை படையும் உலகத்தில் இனியும் இல்லை என்பதை சொல்லுகின்றேன். கழுத்தில் நஞ்சை அணிந்து புலிகள் வீர உலா வந்தார்கள். மாவீரம் படைத்தார்கள். தமிழர்களின் வரலாற்றில் தன்னுடைய பிள்ளைக்கு எண்ணைவிட்டு, தலைசீவி போர்களத்திற்கு அனுப்பிய தாயினை புறநாநூறு பேசுகின்றது. ஆனால் தாயே போய்க் களத்தில் நின்ற போர்க்களம், வீறுமிக்க பெண்கள் விடுதலைப் புலிகளாய் மாவீரம் படைத்த போர்க்களம். அந்தப் போர்க் களமாய் விடுதலைப் புலிகளின் போர்களத்தினை நாம் பார்த்தோம்.
ஒருகாலத்தில் பொத்திப்பொத்தி வளர்த்த பெண்பிள்ளைகள், வீட்டில் அவர்கள் செல்லப்பிள்ளைகளாக வளர்க்கப்பட்டார்கள். ஆனால் அதே பெண்பிள்ளை தமிழீழத்தில் தன்னுடைய தோளில் துப்பாக்கியினை வைத்து, கையில் குண்டை ஏந்தி களத்தில் உலாவந்த வீரவரலாறு. அதுதான் மாவீரர்கள் வீரவரலாறு. அவர்கள் படைத்த வீரம் ஈடுஇணையற்றது, அதுதான் வரலாறு.
இடுப்பில் குண்டைக் கட்டி கடலில் 35 கிலோ மீற்றர் தூரம் நீந்தி சென்று எதிரியின் கப்பலை உடைத்த அங்கயற்கண்ணியின் வீரவரலாறு அப்படி எல்லாம் ஈழவரலாற்றில் பார்த்தோம். முதன் முதல் கரும்புலியாக நிமிர்ந்த மில்லர். அவரின் வரலாறு. இவ்வாறு ஒவ்வொரு மாவீரனின் வரலாறு ஒரு பெரிய காப்பியம். ஒருவன் தன்னுடைய கையில் எழுதுகோலை ஏந்தி தமிழீழ மண்ணில் மாவீரர்களின் வரலாற்றினை எழுதவேண்டும் என்று துணிந்தால், அது பாரதத்தை விடப் பெரியது, இராமாயணத்தைவிட பெரியதாக, மிகவலிமைமிக்க வீறுமிக்க காப்பியமாக அமையும் என்பதில் எந்த ஜயமும் இல்லை.
மாவீரம் படைத்தார்கள் மாவீரர்கள். அந்த மாவீரர்களை நாங்கள் நினைவிற்கொள்கின்றோம். நாம் ஒன்றை மறந்துவிடக்கூடாது, முள்ளிவாய்க்காலில் எல்லாம் முடிந்தது என்று சொன்னார்களே அதற்குப் பின்பு ஜந்தாண்டுகள் தாண்டியும் இன்றும் உலகமெல்லாம் நம்முடைய விடுதலைப் போரைப்பற்றி பேசுகின்றதே, சிங்கள இனவெறியனின் கொடுமையினைப் பற்றி உரக்கச் சொல்லுகின்றதே, அவன் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்படவேண்டியவன் எனச் சொல்ல வருகின்றார்களே, தமிழீழ மண்ணுக்கு வாக்கெடுப்பு மூலம் அது தனிநாடாக உருவாக்கப்படவேண்டும் என்று சொல்கிறார்களே, இதற்கெல்லாம் காரணம் யார் என்று நினைக்கின்றீர்கள்?
இன்று வெளியில் இருந்து வேலைசெய்யும் நாம் அல்ல. தமிழீழ விடுதலைக்காக தங்கள் உயிர்களைத் தூக்கி தந்தார்களே மாவீரர்கள் அவர்கள். அவர்களுடைய உயிர்கள் இன்று இயங்குகின்றன. அவர்களுடைய மூச்சு இன்று இயக்குகின்றது. அவர்களுடைய ஆன்மா இன்று இயக்குகின்றது. அந்த மாவீரர்களின் இயக்கம் தான் இன்றும் என்றும் களத்தில் நெருப்பாய் வெடிக்கின்றது. புயலாய் அடிக்கிறது. கடலாய்க் கொதிக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள்.
ஆகவே மாவீரர் நாளான நவம்பர் 27 இல் அந்த மாவீரர்களை நாம் வணங்குவோம். அந்த மாவீரர்களின் வழியில் தொடர்நது பயணத்தை மேற்கொள்வோம். எங்கள் ஈடிணையற்ற தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள் இன்றும் நம்முன்னால் நிக்கின்றார். அவரின் வீறுமிக்க காலடிகள். அதனை நாம் தொடர்வோம். தமிழீழம் என்பது உறுதியான ஒன்று. ஏற்கனவே வரலாறு கட்டாயம் என்று தீர்மானித்து விட்ட ஒன்று.
ஏற்கனவே முடிவுசெய்யப்பட்டுவிட்ட ஒன்று. ஆகவே தமிழீழம் மலர்கின்ற நாளை நோக்கி மாவீரர்களின் ஈகத்தினை நெஞ்சில் சுமந்து நாம் தொடர்ந்து நடப்போம். வீறுகொண்டு நடப்போம். நிமிர்ந்து நடப்போம். நாம் கைவீசி நடப்போம். மாவீரர்நாளில் நாம் ஆணையெடுப்போம். தமிழீழம் அமையும். அதை அமைத்தே தீருவோம் என்று.