ஜெயபாலன் என்ற நடுநிலைவாத கவிஞனை புலியாக மாற்றிய அரசு!
24 Nov,2013
இலங்கையில் மீண்டும் இனவாத கலவரங்களை ஏற்படுத்தும் நோக்கில் 79 வயதான கவிஞர் ஜெயபாலன் நோர்வேயில் இருந்து புலம்பெயர் தமிழர்களால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சிங்கள பத்திரிகை ஒன்று குறிப்பிட்டுள்ளது.
பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஜெயபாலன் நேற்று இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.
1999 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து நோர்வே சென்ற குடியேறிய ஜெயபாலன், எரிக் சொல்ஹெய்மின் ஆலோசனையின்படி புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்பில் செயற்பட்டதாக திவயின பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
இவர் கடந்த 9 ஆம் திகதி தனது தாயின் கல்லறையில் அஞ்சலி செலுத்துவதற்காக சுற்றுலா வீசா அனுமதியை பெற்றுக்கொண்டு கொழும்பு வந்ததுடன் யாழ்ப்பாணத்திற்கு சென்றதாக தெரியவந்துள்ளது.
ஜெயபாலன் புலம்பெயர் தமிழர்களுக்காக தமிழ் ஊடகவியலாளர் மற்றும் சர்வதேச ஊடகவியலாளர்களை அழைத்து கடந்த 18 ஆம் திகதி செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.
பெரும்பான்மை சிங்களவர்களுக்கு எதிராக முஸ்லிம் மக்களை இணைத்துக் கொண்டு ஆயுதப் போராட்டம் ஒன்றை ஆரம்பிக்கும் முனைப்புகளை தமிழர்கள் மேற்கொள்ள வேண்டும் என இவர் இந்த செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளதாக திவயின குறிப்பிட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சிக்கு சென்று கொண்டிருந்த போது பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.