சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்கவும், அவரது அரசாங்கமும் இந்த நாட்டில் அமைதியான ஜனநாயக ரீதியிலான போராட்டத்தை அனுமதிப்பதற்குப் பதிலாக அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர் என தேசிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது.
அதேவேளை, ரணில் விக்ரமசிங்க நாட்டில் மனித கொலைகளை செய்து வருவதாகவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
“கடந்த 26ஆம் திகதி ஜனநாயகத்தை கோரி வீதியில் இறங்கினோம். எதற்காக, தேர்தலை திட்டமிட்டபடி நடத்தாத ரணிலுக்கு எதிராக மிகவும் அமைதியான போராட்டத்தை முன்னெடுத்தோம்.
தேர்தலுக்கு இடையூறு விளைவித்தது யார், விகாரமஹாதேவி பூங்காவில் இருந்து பெட்டாலிங் ஜெயா வரை செல்ல திட்டமிட்டிருந்தோம், வீதி தடைகளில் இருந்த காவல்துறை அதிகாரிகளிடம் விளக்கினோம்.
ஆனாலும் காவல்துறை எதற்கும் செவிசாய்க்கவில்லை கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை வீசி அடக்க முயன்றனர். இறுதி முடிவு. நிமாலின் சகோதரன் கொலை, மேலும் ஒரு சகோதரர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனடிப்படையில் பார்த்தால் ரணில் விக்ரமசிங்க மனிதக் கொலைகளை செய்கிறார்.
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவை தமது சொந்தக் கோரிக்கைகளுக்காக ஜனநாயக உரிமைகளுக்காக அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அதன் போதும், ரணில் விக்ரமசிங்கவின் குண்டர்கள் குவிக்கப்பட்டு அவர்கள் அடித்து விரட்டி அனுப்பபட்டனர். பின்னர் மாணவர்கள் கொழும்பு பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த போதும் பல்கலைக்கழகத்திலேயே கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
அங்கு பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கண்ணீர் புகைக்குண்டு தாக்கி உயிரிழந்தார். மேலும் ரோயல் கல்லூரி மாணவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.
இதற்கு எதிராக கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்களும் பிள்ளைகளும் இந்த ஜனநாயக விரோத மிருகத்தனமான நடவடிக்கைக்கு எதிராக குரல் எழுப்பினர்.
ரணில் விக்ரமசிங்க, குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களை தாக்கி பதிலடி கொடுத்துள்ளார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வீதியில் இறங்கிய களனிப் பல்கலைக்கழக மாணவர்கள் மீதும் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.