துருக்கிக்கு மீட்பு அணிகளை அனுப்புகிறது இலங்கை!
07 Feb,2023
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்குண்டுள்ளவர்களை மீட்பதற்கான உதவிகளை வழங்க இலங்கை முன்வந்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவிற்கு அமைய, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இந்த விடயத்தை துருக்கி வெளிவிவகார அமைச்சருக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
துருக்கி – சிரியா எல்லை பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 3500ற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன், 20 000திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
துருக்கியில் பூகம்பம் பாதித்த பகுதியில் இருந்த 9 இலங்கையர்கள்!
துருக்கியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருப்பதாக நம்பப்படும் ஒன்பது இலங்கையர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த 9 பேரில் 8 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், இடிந்து வீழ்ந்த கட்டடத்தில் வசித்த 9 ஆவது நபர் சம்பவம் இடம்பெற்ற போது அங்கு இருக்கவில்லை என்று கூறப்படுகின்றது.
மேலும் அவர் தொடர்பில் இதுவரை தொடர்பு கொள்ளப்படவில்லை என துருக்கிக்கான இலங்கை தூதுவர் ஹசந்தி திஸாநாயக்க தெரிவித்தார்.