இலங்கை விமான பயணிகளுக்கு அமுலுக்கு வரும் புதிய கட்டுப்பாடு!
26 Nov,2022
இலங்கை பயணிக்கும் விமானப் பயணிகள் 22 பவுணுக்கு மேல் தங்க நகைகளை அணிந்து கொண்டு நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறாயினும், அவர்கள் வருவதற்கு முன்னர் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டாளர் பணிப்பாளர் நாயகத்திடம் அனுமதி பெற்றால் அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
நாட்டிற்குள் தங்கம் கடத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில் விமானப் பயணிகள் தங்க நகைகள் அணிந்து வருவதற்கு தடை விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதியமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய விடுத்துள்ள அறிக்கையில், நாட்டிற்குள் சட்டவிரோதமான முறையில் தங்கம் கடத்தப்படுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு அல்லது சாதாரண பயணிகளுக்கு இந்த புதிய கட்டுப்பாடு பொருந்தாது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளாந்தம் 50 கிலோ தங்கம் நாட்டிற்கு கடத்தப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சில நபர்கள் அண்டை நாடுகளுக்குச் சென்றுவிட்டு 24 பவுண் தங்க நகைகளுடன் திரும்புவது வழக்கம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தங்கம் கடத்தல் காரணமாக அரசாங்த்திற்கு மாதாந்தம் சுமார் 30 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் இழப்பு ஏற்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.