முப்படைகளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபருக்கு அதிகாரம் அளிக்க முடிவு!
நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முப்படைகளின் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு தேவையான அதிகாரங்களை வழங்குவதற்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கூடிய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்கவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
திருடிச் செல்லப்பட்ட துப்பாக்கிகள் அத்துடன், நாடாளுமன்றம் கூடும் போது அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாகச் சந்திக்கும் உரிமையைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவையில் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அண்மையில் நாடாளுமன்றத்தை கைப்பற்றும் முயற்சியின் போது, இராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று, அவர்களின் T-56 துப்பாக்கிகளை தோட்டாக்களுடன் திருடியுள்ளனர். அந்தச் சம்பவத்தில் இராணுவத்தினரிடம் இருந்து திருடப்பட்ட இரண்டு துப்பாக்கிகளையும் தேடுவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதற்கு பாதுகாப்புத் துறைக்கு அதிகாரம் வழங்க அமைச்சர்கள் தீர்மானித்துள்ளனர்.
கொள்ளுபிட்டி, பிளவர் வீதி - பிரதமர் அலுவலகத்தினை சூழ்ந்து அதனை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடாத்த மறுத்த, அப்பகுதியின் பாதுகாப்புக்கு பொறுப்பாக செயற்பட்ட கொழும்பு 112 ஆம் படையணியின் கட்டளை தளபதி பிரிகேடியர் அனில் சோமவீர பொறுப்புக்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கட்டளை தளபதி பொறுப்புக்களில் இருந்து நீக்கப்பட்ட அவர் இராணுவ தலைமையகத்துக்கு மீள அழைக்கப்பட்டுள்ளார். பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று சில மணி நேரத்துக்குள்ளேயே இந்த விடயம் பதிவாகியுள்ளது.
இதனைவிட, பிரிகேடியர் சோமவீரவுடன் அருகே இருந்தவாறு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட இராணுவத்தின் சிங்க ரெஜிமென்ட்டின் 12 ஆவது உப படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேர்ணல் பி.எச்.ஜீ.பி. குணவர்தனவும் கடமைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கடந்த 13 ஆம் திகதி, பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பிரதமர் அலுவலகம் முன்பாக போராட்டக்காரர்கள் பாரிய போராட்டத்தை முன்னெடுத்தனர். இதன்போது அவர்கள் பிரதமர் அலுவலகத்தை தமது பொறுப்பிலும் கொண்டு வந்தனர்.
இந்த போராட்டத்தின் இடையே, பாதுகாப்புத் தரப்புக்கு போராட்டக் காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடாத்த அனுமதியளிக்கப்பட்டது.
எனினும் ஸ்தலத்தின் பாதுகாப்புக்கு பொறுப்பாக இருந்த பிரிகேடியர் சோமவீர, பொது மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடாத்த மறுத்திருந்தார்.
இவ்வாறான நிலையிலேயே அவர் உள்ளிட்ட அங்கு கடமைகளில் பொறுப்பாக இருந்த உயர் அதிகாரிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து விசாரணைகளை முன்னெடுத்து, அவர்கள் கடமைகளில் இருந்து நீக்கப்பட, துப்பாக்கிச் சூடு முன்னெடுக்காமை குறித்த விடயம் காரணமா என வெளிப்படுத்தி, விடயத்தில் தலையீடு செய்யுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவிடம் இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் முறைப்பாடளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.