இந்தியாவுடன் ஏற்படவிருந்த இராஜதந்திரமோதலை இலங்கை மயிரிழையில் தவிர்த்துக்கொண்டது என ஆங்கில இணையமொன்று தெரிவித்துள்ளது.
இந்திய மீனவர்கள் 54 பேர் கைதுசெய்யப்பட்டதை தொடர்ந்து இந்தியாவுடன் இலங்கை இராஜதந்திரமோதலில் சிக்கும் ஆபத்து ஏற்பட்டதாக எக்கனமி நெக்ஸ்ட் என்ற இணையத்தளம் தெரிவித்துள்ளது.
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இந்தியா எடுத்த நிலைப்பாட்டிற்கு பதில் நடவடிக்கையாகவே இந்த கைது இடம்பெற்றது என இராஜதந்திர வட்டாரங்கள் கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இந்தியா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு ஆதரவளிக்கும் என இலங்கையின் வெளிவிவகார செயலாளர் தெரிவித்திருந்த போதிலும் இந்தியா வாக்களிப்பை தவிர்த்ததுடன் பிரிட்டன் தலைமையிலான நாடுகளின் தீர்மானத்திற்கு தனது ஆதரவை வெளியிட்டது.
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த ஆதாரங்களை உருவாக்குவதற்கான பொறிமுறையை உருவாக்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கும் இந்த தீர்மானத்திற்கு 22 நாடுகள் வாக்களித்திருந்தன.
இலங்கைக்கு எதிராக மனித உரிமை பேரவையில் அதிக நாடுகள் வாக்களித்தமை இந்த தடவையே என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வாக்கெடுப்பு முடிவடைந்த மறுநாள் ஸ்ரீலங்கா கடற்படையினர் இந்திய மீனவர்களை கைதுசெய்தனர்.
2014 ஜூன் மாதத்திற்கு பின்னர் அதிகளவான மீனவர்கள் கைதுசெய்யப்பட்ட சம்பவம் இது.
இந்த சம்பவத்தினால் தமிழக தேர்தலில் ஏற்படப்போகும் பாதிப்பு குறித்து புதுடில்லியில் பதட்டம் ஏற்பட்டது.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவது வழமை எனினும் இந்த கைதுகள் ஸ்ரீலங்கா கடற்படையின் துன்புறுத்தல்களாக நோக்கப்படுகின்றன.
இந்த கைதுகள் பிரதமர் நரேந்திரமோடியின் பாஜக கடும் சவாலை எதிர்கொண்டுள்ள தமிழகத்தில் எதிர்ப்புகளை உருவாக்கியிருந்தன.
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் வாக்கெடுப்போடு இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளமை இந்தியாவுடன் பகைமையை வெளிப்படுத்தும் நடவடிக்கை என இந்திய வெளிவிவகார அமைச்சக அதிகாரிகள் தெளிவாக தெரிவித்துள்ளனர்.
இந்தியா தனது அதிருப்தியை இலங்கையிடம் தெரிவித்ததை தொடர்ந்து உள்ளுர் அதிகாரிகள் பாதிப்பை சரிசெய்வவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
எனினும் இந்த விவகாரத்தை கடற்படையுடன் நேரடியாக கையாளும் யாழ்ப்பாண அதிகாரிகள் தமிழக மீனவர்களை விடுதலை செய்வதற்கு தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
40 பேரை மாத்திரம் விடுதலை செய்ய இணங்கிய அவர்கள் 14 பேரையும் அவர்களது படகுகளையும் தடுத்துவைக்க தீர்மானித்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் கைது தேர்தல் பிரசாரமாக மாற்றமடைவதை தவிர்ப்பது குறித்து கவனமாக உள்ள புதுடில்லிக்கு 14 மீனவர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
உயர்மட்ட தலையீடுகளை தொடர்ந்து சனிக்கிழமை 14 மீனவர்களையும் அவர்களது படகுகளையும் நீதவான் விடுவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வேகமாக பரவிவரும் இந்த தருணத்தில் கொரோனா வைரஸ் பரவலை தவிர்ப்பதற்காக தமிழக மீனவர்களை விடுதலை செய்யவேண்டும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக இந்தியாவுடனான பனிப்போரை இலங்கை இராஜதந்திர ரீதியில் தவிர்த்துக்கொண்டுள்ளது என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.