இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து! எச்சரிக்கை விடுக்கும் வைத்தியர்கள்
27 Jul,2020
இலங்கையில் இன்னமும் கொரோனா வைரஸ் பரவல் ஆபத்து நீங்கவில்லை என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொற்று நோய் விஞ்ஞான பிரிவு இந்த தகவலை தெரிவித்துள்ளது. நாட்டில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சமூகத்திற்குள் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்படலாம் என சங்கத்தின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இதனால் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்றுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது தொற்றுக்குள்ளானவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்குள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் வைரஸ் கட்டுப்படுத்திய நிலைமை ஒன்று இலங்கையில் காணப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தீவிரமடையும் கொரோனா! தற்போதைய நிலை என்ன?
கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தை சேர்ந்தவர்கள் அவர்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் மூலம் இலங்கையில் கொரோனா தொற்று மேலும் அதிகரித்துள்ளது.
இலங்கையில் நேற்றைய தினம் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையத் தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்களில் மேலும் 3 பேர், சேனாபுர புனர்வாழ்வு நிலையத்தை சேர்ந்த 5 பேர் மற்றும் கட்டாரில் இருந்து நாடு திரும்பியவர்களில் மேலும் 4 பேர் என 12 பேர் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களது எண்ணிக்கை 2782 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 3 பேர் இன்று குணமடைந்து வெளியேறியதை அடுத்து இதுவரை குணமடைந்தவர்களது எண்ணிக்கை 2106 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருபவர்களது எண்ணிக்கை 665 ஆக உள்ளது.
அத்துடன் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.