முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தில் கனேடிய பிரதமர் ஸ்ரீலங்கா அரசிடம் விடுத்துள்ள வேண்டுகோள்
19 May,2020
இலங்கையில் நீண்ட கால சமாதானம் மற்றும் செழிப்பினை உறுதிசெய்யக்கூடிய வகையில் அர்த்தபூர்வமான பொறுப்புக்கூறும் செயல்முறையை இலங்கை அரசாங்கம் பின்பற்றவேண்டும் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து இன்றுடன் பதினொரு வருடங்கள் கடந்துள்ள நிலையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
இலங்கையில் மோதல் முடிவிற்கு வந்து பதினொரு வருடங்களாவதை நாங்கள் நினைவுகூரும் அதேவேளை எனது சிந்தனைகள் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களுடைய குடும்பங்கள் அவர்களுடைய நேசத்திற்குரியவர்கள் தொடர்பாகவே உள்ளன.
இது முள்ளிவாய்க்காலின் இறுதிக் கட்டப்போர்,அதன்போது இழக்கப்பட்ட உயிர்கள் உட்பட 26 வருட யுத்தம் குறித்து சிந்திப்பதற்கான தருணமாகும்.
மேலும் காயமடைந்தவர்கள்,காணாமல்போனவர்கள்,வீடுகள் சமூகங்களில் இருந்து இடம்பெயர நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் குறித்தும் நினைவுகூரவேண்டும்.
கடந்த 11 வருடங்களில் நான் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பல கனடா பிரஜைகளை சந்தித்துள்ளேன்.கணக்கிட முடியாத இழப்புகள்,மிகப்பெரிய துன்பம்,துன்பத்திலிருந்து மீள் எழும் தொடர்ச்சியான திறன் என்பன நிரந்தர சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்காக தொடர்ந்து பாடுபடவேண்டியதன் அவசியத்தை நினைவுபடுத்தியுள்ளன.
கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொள்ளுதல் எதிர்காலத்தை உருவாக்குவதற்கு முக்கியம்,அர்த்தபூர்வமான பொறுப்புக்கூறல் செயல்முறையை பின்பற்றுமாறு இலங்கைக்கான எனது வேண்டுகோளை நான் மீண்டும் விடுக்கின்றேன்.
கனடா இலங்கை அரசாங்கத்திற்கும் நீதி நல்லிணக்கம் அனைவரையும் உள்வாங்குதல் ஆகியவற்றினை நோக்கி பணியாற்றுபவர்களிற்கும் தனது ஆதரவை தொடர்ந்தும் வழங்கும்.இவை அனைத்தும் இலங்கையில் நீண்ட கால சமாதானம் மற்றும் செழிப்பினை உறுதிசெய்யக்கூடிய விடயங்கள் என தெரிவித்துள்ளார்