சிங்களத்திற்கு பதிலாக தமிழ்: இலங்கையில் தமிழ் பள்ளிப் பெயர்கள் மாற்றம்
21 Oct,2019
ஊவா மாகாணத்தில் பல்வேறு விதமான பெயர்களில் காணப்பட்ட, 140 தமிழ் மொழி பாடசாலைகளின் பெயர்கள் தமிழ் மொழியில் மாற்றப்பட்டுள்ளன.
தமிழ் மொழி பாடசாலைகளுக்கு தமிழ் மொழியில் பெயர் வைக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் இந்த நடவடிக்கையை முன்னெடுத்ததாக ஊவா மாகாண முன்னாள் தமிழ் கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவிக்கின்றார்.
ஊவா மாகாணத்தில் 203 தமிழ் மொழி பாடசாலைகள் காணப்படுகின்ற நிலையில், முதற்கட்டமாக 140 பாடசாலைகளின் பெயர்கள் தமிழ் மொழியில் மாற்றப்பட்டுள்ளன.
குறிப்பாக இந்திய வம்சாவளி தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி, மலையக பெருந்தோட்ட மக்களுக்காக சேவையாற்றி உயிர்நீத்த அரசியல் தலைவர்கள் மூவரின் பெயர்கள் மூன்று பாடசாலைகளுக்கு சூட்டப்பட்டுள்ளன.
01. பதுளை கோணமுட்டாவ தமிழ் வித்தியாலயம், பதுளை சந்திரசேகரன் தமிழ் வித்தியாலயம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
02. பதுளை கம்பஹா தமிழ் வித்தியாலயம், பதுளை வேலாயுதம் தமிழ் மகா வித்தியாலயம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
03. பண்டாரவளை பூணாகலை தமிழ் மகா வித்தியாலயம், ஸ்ரீ சௌமியமூர்த்தி தொண்டமான் கல்லூரி என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
ஊவா மாகாண சபைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள தமிழ் பாடசாலைகளின் பெயர்களை மாற்றும் நடவடிக்கைக்கு கடந்த காலங்களில் சில தரப்பினர் எதிர்ப்பை வெளியிட்டு வந்தனர்.