கோட்டாவிற்கு எழுந்துள்ள சிக்கல்; ஜனாதிபதி வேட்பாளரை மாற்றப்போகும் மஹிந்த!
02 Oct,2019
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் ஸ்ரீலங்கா கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டை தொடர்பில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் பொதுஜன பெரமுனவின் அவசரக் கூட்டமொன்று அதன் தலைவரான மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் நடைபெறவுள்ளது.
இதன்போது கோட்டாபய ராஜபக்சவிற்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு சட்ட சிக்கல்கள் எழுந்தால் அதற்கு எவ்வாறு முகம்கொடுப்பது என்பது தொடர்பிலும், கோட்டாவால் போட்டியிட முடியாது போகும் பட்சத்தில் யாரை நிறுத்துவது என்பது குறித்தும் ஆராய்வதற்காகவே இந்த அவசரக் கூடடம் கூட்டப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோட்டாபய ராஜபக்ச ஸ்ரீலங்கா கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டைகளை பெறுவதற்காக சமர்ப்பித்த ஆவணங்களை சமர்பிக்கும்படி மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையிலேயே இந்த அவசரக் கூட்டம் கூட்டப்பட்டிருக்கின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவிற்கு ஸ்ரீலங்கா பிரஜையாக இருப்பதற்கு தகுதி இல்லை என்று தெரிவித்து சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தைச் சேர்ந்த காமினி வியாங்கொட மற்றும் பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு மீதான விசாரணைக்கான ஆவணங்களை சமர்பிப்பதற்காக இன்று மாலை மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச சார்பாக முன்னிலையாகிய ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வாவினால், கோட்டாபய ராஜபக்ச பெற்றுக்கொண்ட தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு ஆகியவற்றின் பிரதிகள் மற்றும் அதற்கான ஆவணங்கள், அவரால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட வாக்குமூலத்தின் பிரதி என்பன மன்றில் சமர்பிக்கப்பட்டன.
இதனை கவனத்திற்கு எடுத்த நீதிபதிகள் குழாம், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டை என்பவற்றுக்கான ஆவணங்கள் இருந்தால் அடுத்த விசாரணைத் தவணையின்போது மன்றில் சமர்பிக்கும்படி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள ஆணையாளர், அரச நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன ஆகியோருக்கு உத்தரவு பிறப்பித்தது.
அத்துடன் இந்த மனு மீதான அடுத்தகட்ட விசாரணையை நாளை மறுதினமான ஒக்டோபர் 02 ஆம் திகதிவரை ஒத்திவைப்பதாகவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச வேட்பாளராக ஓகஸ்ட் 11 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
எனினும் கோட்டாபய ராஜபக்சவின் அமெரிக்க பிரஜாவுரமையை இரத்துச் செய்யப்படவில்லை என்ற சர்ச்சை தொடர்ந்தும் எழுப்பப்பட்டு வருகின்றது..
கோட்டாபய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்வதற்கு விண்ணப்பித்திருந்த விடயத்தை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் உறுதிப்படுத்தியிருந்த போதிலும் இதுவரை அவரது குடியுரிமை இரத்துச் செய்யப்பட்ட தகவலை உறுதிப்படுத்தவில்லை.
இந்த நிலையில் கொழும்பிலிருந்து வெளிவரும் சிங்கள நாளிதழொன்று கோட்டாபய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை இரத்து செய்யப்பட்டதை உறுதிப்படுத்தும் ஆவணம் என்று குறிப்பிட்டு ஆவணமொன்றை வெளியிட்டிருந்தது.
இது தொடர்பான பல்வேறு சர்ச்சைகள் நீடித்துவந்த சிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரான பெசில் ராஜபக்ச கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி கோட்டாபய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையை இரத்துச்செய்துள்ளதாக கூறியிருந்த அதேவேளை கோட்டாபய ராஜபக்சவும் பல சந்தர்ப்பங்களில் இதனை தெரிவித்திருந்தார்.
எனினும் இன்றுவரை அமெரிக்க அரசாங்கம் அல்லது கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தினால் கோட்டாபய ராஜபக்சவின் அமெரிக்கக் குடியுரிமை இரத்து செய்யப்பட்டதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது