புதிய இராணுவத் தளபதியை நியமிப்பதில் இழுபறி
19 Aug,2019
இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவின் பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், இராணுவத்தின் புதிய தளபதியை நியமிப்பது தொடர்பாக இழுபறிநிலை ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராணுவத் தளபதியாக, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை நியமிக்கத் திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியாகியிருந்தது.
எனினும் இறுதிப் போர்க்கால, சர்ச்சைக்குரியவரான அவருக்கு பதவி உயர்வு அளிக்கப்படுவது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருந்தன.
இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்படுவதற்கு, ஜனாதிபதி சிறிசேன தனது சொந்த கட்சியின் உறுப்பினர்களிடமிருந்தும் எதிர்ப்புகளை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அத்தோடு, ஐ.தே.க.வும் இந்த விவகாரத்தில் முரண்பட்டுள்ளது.
இதேவேளை, இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவின் பதவிக்காலம் நேற்று இரவுடன் முடிவுக்கு வந்துள்ளது. இவ்வாறான நிலையில், புதிய இராணுவத் தளபதி நியமிக்கப்படுவதில் தொடர்ந்தும் இழுபறிநிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது