தோப்பூர் உப பிரதேச செயலகத்தையும் தரமுயர்த்த வேண்டும் ;ஆர்.எம். அன்வர்
24 Jun,2019
திருகோணமலை மாவட்டத்தின், தோப்பூர் உப பிரதேச செயலகத்தையும் தரமுயர்த்த வேண்டுமென கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஆர்.எம். அன்வர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக திங்கட்கிழமை 24.அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தோப்பூர் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி அப்பிரதேச மக்கள் பலமுறை அரசியல் ரீதியாக மட்டுமன்றி அஹிம்சை போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர்.
முஸ்லிம்கள் வாழும் தோப்பூர் பிரதேசத்தின் செல்வநகர் பகுதி, சேருவில பிரதேச செயலகத்துடன் இணைக்கப்பட்ட பகுதியாகும்.
இதன் காரணமாக கடந்த காலங்களில் அப்பகுதிக்குள் இருக்கும் நீநாகேணி முஸ்லிம்களின் காணி பிரச்சினை தொடர்பில் இன்னும் தீர்வு எட்டப்படாத நிலையிலும், காணி உறுதிப் பத்திரம் வழக்கப்படாத நிலையிலும் பல அநியாயங்கள் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
புராதன பூமி என்ற போர்வையில் காணிகள் அபகரிக்கப்படுகின்ற நிலைமையே இங்கு காணப்படுகின்றது.
மக்களின் நியாயமான கோரிக்கை எதுவாக இருந்தாலும் எந்த இனமாக இருந்தாலும் அது காலதாமதமின்றி நிறைவேற்றப்பட வேண்டும்.
நிலத்தொடர்போடு காணப்படும் அதிகாரபூர்வமான தோப்பூர் பிரதேச செயலகத்துக்கான கோரிக்கை இந்த தருணத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் அதனை நிறைவேற்றுவதற்குரிய சகல நடவடிக்கைகளையும் அரசியல் தலைமைகள் கட்சி பேதமின்றி இன வேறுபாடின்றி முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்