சுஸ்மாவிடம் மன்னிப்புக் கோரினார் பீரிஸ் – உறவுகளை முறிக்க முடியாதாம்
இந்தியாவுடன் வலுவான உறவைக் கட்டியெழுப்பியுள்ளதாகவும், அதனை ஒருபோதும் உடைக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்.
சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட கட்டுரையால், இந்தியாவுடனான உறவுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சிகள் எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“நான் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுடன் பேசினேன்.
தவறுகள் நடந்திருக்கிறது என்றும், அதனை மன்னிக்குமாறும் கேட்டுக் கொண்டேன்.
இது உறவுகளை முறித்து விடாது.
நாம் இந்தியாவுடன் வலுவான உறவுகளைக் கட்டியெழுப்பியுள்ளோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்
சிறிலங்காவுடன் பிரச்சினையைத் தீர்க்க பொருத்தமான வழிமுறையைக் கையாளுமாம் இந்தியா
சிறிலங்காவுடனான, உணர்வுபூர்வமான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பொருத்தமான வழிமுறைகள் கையாளப்படும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையட் அக்பருதீன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய அதிகாரி ஒருவர், தென்னிந்தியாவில் உள்ள அமெரிக்க, இஸ்ரேல் தூதரகங்களைத் தாக்குவதற்கு ஐஎஸ்ஐயுடன் இணைந்து சதி செய்ததாக வெளியான தகவல்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர்,
“இந்தியாவும், சிறிலங்காவும் ஒன்று மற்றையதன் கவலைகளைத் தீர்ப்பதற்கு நிறைய வழிமுறைகளைக் கொண்டிருக்கின்றன.
அவை எப்போதுமே பகிரங்கப்படுத்தப்படாதவையாக இருக்கலாம்.
இராஜதந்திரிகள் முன் கதவுகளையே பயன்படுத்துகின்றனர். ஏனையவர்களும் கூட அதனைப் பயன்படுத்துகின்றனர்.
எமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான உணர்வுபூர்வமான சூழலில், அவற்றைத் தீர்ப்பதற்கு பொருத்தமான வழிமுறைகைள் கையாளப்படும் என்று நான் உறுதியளிக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
பரஸ்பர சட்ட உதவி உடன்பாட்டுக்கு அமைய, கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரக நுழைவிசைவுப் பிரிவு அதிகாரியான அமீர் சுபைர் சித்திக் பற்றிய விபரங்களை, இந்தியாவின் தேசிய புலனாய்வுப் பிரிவு சிறிலங்கா அரசிடம் கோரிய நிலையில், குறித்த அதிகாரி இஸ்லாமாபாத்துக்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
பாஜக பொதுச்செயலர் ராம் மாதவ் கோத்தாவுடன் இரகசியச் சந்திப்பு
இந்தியாவை ஆட்சி செய்யும் பாஜகவின் பொதுச்செயலர் ராம் மாதவ், சிறிலங்காவுக்கு இரகசியப் பயணம் மேற்கொண்டு, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் நேற்று முன்தினம் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பில், பரஸ்பர நலன்களுடன் தொடர்புடைய மற்றும் இருதரப்பு விவகாரங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
கோத்தாபய ராஜபக்சவின் நேரடியான கட்டுப்பாட்டில் உள்ள சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும், தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவையும் கேவலப்படுத்தும் கட்டுரை வெளியிடப்பட்ட விவகாரம், இந்திய நாடாளுமன்றத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்த வேளையிலேயே பாஜக பொதுச்செயலர், சிறிலங்கா பாதுகாப்புச் செயலரைச் சந்தித்துள்ளார்.
எனினும், சர்ச்சைக்குரிய இந்த விவகாரம் தொடர்பாக, இந்தச் சந்திப்பில் பேசப்பட்டதாகத் தகவல் ஏதும் வெளியாகவில்லை.