தந்தையை போல் நானும் கட்சிக்காக உயிரை தியாகம் செய்ய தயார்!- சஜித் பிரேமதாச
தனது தந்தையான முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவை போன்று ஐக்கிய தேசியக் கட்சிக்காக உயிரை தியாகம் செய்ய தயாராக இருப்பதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அம்பாந்தோட்டை பெலியத்த பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் பொழுதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கட்சியில் இருந்து நபர்களை நீக்க வேண்டும் என்பதை பற்றிய சிலர் பேசுகின்றனர். கட்சிக்கு ஆட்களை சேர்க்க வேண்டும் என்பது பற்றி பேசுவதில்லை.
ஒருபுறம் என்னை கட்சியின் தலைமைத்துவச் சபைக்கு வருமாறு கூறுகின்றனர். மறுபுறம் வரவிட்டால் வெட்டி எறிந்து விடுவோம் என்று கூறுகின்றனர்.
நான் இந்த மிரட்டல்களுக்கும் கர்ஜனைகளும் செவிக் கொடுப்பவன் அல்ல. கட்சியின் வெற்றிப் பாதை பற்றியே நான் எப்போதும் சிந்திப்பேன். தோல்வியடைந்து பதவிகளை தக்க வைத்து கொள்ளும் அரசியல் நாடக நடத்துபவர்களுக்கு நான் ஒத்துழைப்பு வழங்க மாட்டேன்.
என் தந்தை கூறியது போன்று உண்மை ஒரு நாள் வெல்லும். என் தந்தை ஐக்கிய தேசியக் கட்சிக்காக உயிரையும் தியாகம் செய்தார். அவர் உயிரை தியாகம் செய்தது போன்று கட்சிக்காக நானும் உயிரை தியாகம் செய்வேன். இதனை மிகவும் மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்கிறேன் என்றார்.
தவறுகளை திருத்த வேண்டும் இல்லையேல் நாட்டுக்கு அவப்பெயர் ஏற்படும்: கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை
மேற்குலக நாடுகளை குறை கூறுவதால் பயனில்லை எனவும் நாட்டின் தவறுகளை நாமே திருத்திக் கொள்ள வேண்டும் எனவும் கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
இலங்கை ஆயர்கள் சம்மேளனத்தின் மண்டபத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் உடனடியாக அமுல்படுத்த வேண்டும்.
இதனை செய்யாது மேற்குலக நாடுகள் மீது குறைக் கூறுவதில் பயனில்லை. எமது தவறுகளை நாமே திருத்திக் கொள்ள வேண்டும். இல்லா விட்டால் சர்வதேச ரீதியில் நாடு அவப்பெயருக்கு உள்ளாகும்.
அரசியல் அமைப்புச் சட்டத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டுமாயின் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி மாற்றங்களை செய்யாது.
செய்ய போகும் மாற்றங்களை முன்வைத்து சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தங்களை செய்ய வேண்டும் எனவும் பேராயர் குறிப்பிட்டார்.
மலையகப் பெருந்தோட்டப் பகுதியில் கருக்கலைப்பு சம்பவங்களின் எண்ணிக்கை உயர்வு!
மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் சட்டவிரோத கருக்கலைப்புச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மத்திய மாகாணசபை உறுப்பினர் சிவகுரு சரஸ்வதி இதனைத் தெரிவித்துள்ளார்.
இளவயது பெண்கள் அதிகளவில் கருவுருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
குடும்பக் கட்டுப்பாடு மற்றும் பாலியல் கல்வி பற்றி போதியளவு தெளிவின்மையே இதற்கான காரணம் என தெரிவித்துள்ளார்.
பாலியல் வன்முறை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களும் உயர்வடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த தென் மாகாண முதலமைச்சர் நான்!- கீதா குமாரசிங்க
தென் மாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் தனே என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எல்பிட்டிய தொகுதி அமைப்பாளரும் பிரபல சிங்கள நடிகையுமான கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
தவலம தேசியப் பாடசாலையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போது அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் காலத்தில் மேல் மற்றும் தென் மாகாணங்கள் கலைக்கப்படும். நான் தென் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெறுவது மட்டுமல்ல நானே முதலமைச்சர்.
நான் தற்பொழுது நாடாளுமன்ற உறுப்பினராக இல்லை. பணம் சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை. நான் சம்பாதித்ததை மக்களின் சேவைகளுக்காக பயன்படுத்தி வருகிறேன்.
இருப்பதை இல்லாமல் செய்து கொள்வே அரசியலுக்கு வந்தேனே தவிர சம்பாதிக்கும் நோக்கில் அரசியலுக்கு வரவில்லை. இதனால் என்னால் தென் மாகாண முதலமைச்சராக முடியும். அதற்கான உரிமையும் உள்ளது. இதனை பொறுப்புடன் நான் கூறுகிறேன்.
இனிப்பு பொருட்களை தான் எறும்பு மொய்க்கும். நான் பெண் என்பதால் அதிகம் கவரப்படுவேன். என்னுடன் மக்கள் உள்ளனர். இதனை பலரால் பொறுத்து கொள்ள முடியவில்லை. இதன் காரணமாவே பல்வேறு கதைகளை கூறி வருகின்றனர் என்றார்.
விசாரணைகள் துரிதமடைய வேண்டும் இலங்கையிடம் ஜப்பான் வலியுறுத்தல்: ஹக்கீமிடம் அகாஷி எடுத்துரைப்பு
இலங்கையில் இடம்பெற்ற சில சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டும். அடுத்த வருடம் ஜெனிவா மனித உரிமைப் பேரவை கூட்டத்தொடருக்கு முன்னர் விசாரணைகளில் முன்னேற்றங்களை காட்ட வேண்டும் என்று ஜப்பானின் இலங்கைக்கான விசேட சமாதான தூதுவர் யசூஷி அகாஷி நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நட்பு நாடு என்ற ரீதியில் இராஜதந்திர மட்டத்தில் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு உதவிகளை வழங்க ஜப்பான் தயார் என்றும், எனினும் இலங்கையானது நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வைக் கண்டு தனக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் அகாஷி ரவூப் ஹக்கீமிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஜப்பானின் இலங்கைக்கான விசேட சமாதான தூதுவர் யசூஷி அகாஷி நேற்று பிற்பகல் நீதியமைச்சரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீமை கொள்ளுப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு அமைச்சர் ஹக்கீடம் தெரிவித்துள்ளார்.
சுமார் ஒரு மணிநேரம் இந்த சந்திப்பு இடம்பெற்றது. சந்திப்பின் பின்னர் அது தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில்,
ஜப்பானின் இலங்கைக்கான விசேட சமாதான தூதுவர் யசூஷி அகாஷியுடனான சந்திப்பு மி்கவும் பயனுள்ளதாக அமைந்தது. யுத்தத்துக்குப் பின்னஇரான நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் அகாஷி என்னுடன் விரிவாக கலந்துரையாடினார்.
விசேடமாக எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தொடருக்கு முன்பதாக இலங்கையின் நிலைமைகளில் முன்னேற்றங்களை வெளிக்காட்டுமாறு அவர் கோரினார்.
அவருக்கு யுத்தத்துக்குப் பின்னரான இலங்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து நான் தெளிவாக எடுத்துரைத்தேன். மேலும் நல்லிணக்கத்தில் முன்னேற்றங்களை ஏற்படுத்துவதற்கு தடையாகவுள்ள விடயங்கள் குறித்தும் அவரிடம் எடுத்துரைத்தேன்.
சர்வதேச சமூகத்தின் பல்வேறு தரப்புக்களினால் ஆர்வம் காட்டப்பட்டுள்ள விடயங்களில் நாங்கள் எவ்வாறு வேலை செய்து வருகின்றோம் என்பது தொடர்பில் அவருக்கு விளக்கமளித்தேன். எமது பொறுப்பு என்ற வகையில் நாம் எமது கடப்பாடுகளை செய்துவருகின்றோம்.
உள்நாட்டு கட்டமைப்பு என்ற ரீதியில் நீண்டகாலம் தீர்க்கப்படாமல் இருக்கும் விடயங்கள் குறித்தும் நாம் செயற்பட்டுவருகின்றோம். அந்த நடவடிக்கைகளின் முன்னேற்றங்கள் குறித்து விளக்கமளித்தேன்.
குறிப்பாக இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் குறித்தும் அவருக்கு விளக்கமளித்தேன். சாட்சிகளை பாதுகாக்கும் சட்டமூலம் தயாரிக்கப்பட்டு தற்போது அமைச்சரவையின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதத்துக்கு முன்னர் அதனை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவரிடம் உறுதியளித்தேன்.
ஜப்பான் எமது நட்பு நாடாகும். குறிப்பாக ஜெனிவாவில் இலங்கை தொடர்பில் ஆர்வம் காட்டி செயற்படும் மேற்கு நாடுகளுடன் ஜப்பான் சிறந்த உறவுகளை பேணுகின்றது. எனவே மார்ச் மாதத்துக்குள் சில வேலைத்திட்டங்களை துரிதமாக முன்னெடுக்குமாறு ஜப்பான் வலியுறுத்தியது.
மேலும் மூதூரில் 17 அரச சார்பற்ற பணியாளர்கள் கொலை செய்யப்பட்டமை மற்றும் திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் குறித்து விசாரணைகளின் தாமதம் குறித்து அவர் வினவினார்.
இரண்டு சம்பவங்களினதும் விசாரணைகளின் தற்போதைய நிலைமைகள் மற்றும் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து அவருக்கு நான் விளக்கமளித்தேன். குறிப்பாக திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து தெளிவுபடுத்தினேன்.
இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற சில சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்தவேண்டும். விசாரணை செயற்பாடுகளில் காணப்படும் தாமதங்களை களையவேண்டும். அடுத்தவருடம் ஜெனிவா மனித உரமைப் பேரவை கூட்டத் தொடருக்கு முன்னர் விசாரணைகளில் முன்னேற்றங்களை காட்டவேண்டும் என்றே அகாஷி எங்களிடம் கோரிக்கை விடுத்தார்.
அதாவது அடுத்த மார்ச் மாதத்துக்கு முன்னர் அரசாங்கத்தின் கடப்பாடுகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று அவர் கூறினார். நல்லலெண்ண த்தின் அடிப்படையிலும் நட்பு நாடு என்ற அடிப்படையிலுமே அவர் இந்த கோரிக்கைகளை முன்வைத்தார்.
இதேவேளை முஸ்லிம் மக்களுக்கு எதிராக கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட விஷமப் பிரசாரங்கள் குறித்தும் விளக்கினேன். அதாவது மத ரீதியிலான வன்முறைகளை தடுக்கும் நோக்கில் அதனை குற்றமாக அடையாளம் காணும் வகையில் சட்டமூலங்கள் கொண்டு வரப்படவுள்ளதையும் அவருக்கு எடுத்துரைத்தேன். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற அடிப்படையில் நல்லிணக்கம் தொடர்பில் எனது நிலைப்பாட்டையும் அறிவித்தேன் என்றார்.
60 மில்லியனுக்கும் அதிகமான தங்கம் மற்றும்
சுமார் 64 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் மாணிக்க கல் கடத்த முற்பட்ட நபர் ஒருவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி பிரதேசத்தைச் சேர்ந்த ஏற்றுமதியாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்க ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.
சந்தேகநபரிடமிருந்து 47 மில்லியனுக்கும் அதிகமான மாணிக்கக் கல் மற்றும் 17 மில்லியனுக்கும் அதிகமான தங்க கட்டிகள் 8 கைப்பற்றப்பட்டுள்ளன.
ஆறு கோடி ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் மாணிக்கக் கற்களை சுங்கப் பிரிவினர் மீட்டுள்ளனர்
ஆறு கோடி ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் மாணிக்கக் கற்களை சுங்கப் பிரிவினர் மீட்டுள்ளனர்.
இரண்டு பெட்டிகளில் அடைத்து இவற்றை சட்டவிரோதமான முறையில் இந்தியாவிற்கு கடத்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க சுங்கப் பிரிவு அதிகாரிகள் குறித்த பொருட்களை மீட்டுள்ளனர்.
காலி பிரதேசத்தைச் சேர்த்த இரத்தினக்கல் வியாபாரி ஒருவர் ஒருகோடி ரூபா பெறுமதியான இரத்தினக் கற்களை ஏற்றுமதி செய்வதாகத் தெரிவித்து இவ்வாறு அதிகளவிலான பொருட்களை ஏற்றுமதி செய்ய முயற்சித்துள்ளார்.
இந்த இரண்டு பெட்டிகளும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படவிருந்தன.
மிகவும் பெறுமதி வாய்ந்த இரத்தினக் கற்கள் இந்த பெட்டிகளில் காணப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வடக்கில் ஜனநாயகத்தை நிலைநாட்ட சர்வதேசத்தின் தலையீடு அவசியம்!- அகாஷியிடம் சம்பந்தன் தெரிவிப்பு
தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுத்து வடக்கில் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டுமானால் சர்வதேசத்தின் தலையீடுகள் அவசியம். வடக்கில் ஜனநாயகத்திற்காக அரசியல் ரீதியிலான தீர்வு ஒன்றினையே எதிர்பார்க்கின்றோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மேலும் வடக்கில் உள்ள இராணுவத்தினரை உடனடியாக வெளியேற்றி தமிழ் மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வரை அரசாங்கத்திற்கு சகல விதத்திலும் அழுத்தங்களை கொடுப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.
இலங்கைக்கான ஜப்பானிய விசேட தூதுவர் யசூஷி அகாஷி உடனான உத்தியோகபூர்வ சந்திப்பொன்றினை நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மேற்கொண்டிருந்தனர். சுமார் 3 மணித்தியாலத்திற்கு அதிகமாக இருதரப்பினரும் கலந்துரையாடியிருந்தனர்.
இதன் பின்னர் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்இபிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு வாழ் தமிழர்கள் தமது வாழ்வில் ஜனநாயகத் தினையும் சுதந்திரத்தினையும் தொலைத்து நீண்டகாலம் ஆகிவிட்டது. இதனை வென்றெடுக்க வேண்டிய கடப்பாட்டில் நாம் போராடிவருகின்றோம். தமிழர்களின் நிலை என்னவென்பதை கடந்த வடமாகாண சபை தேர்தல் மூலம் முழு உலகமும் அறிந்துவிட்டது. இப்போது வடக்கு மக்களும் இநாமும் எவற்றை எதிர்பார்க்கின்றோம், எதற்காக போராடுகின்றோம் என்பதையும் அனைவரும் அறிந்துவிட்டனர்.
எனவே, தமிழ் மக்களின் பாதுகாப்பினையும் அவர்களுக்கான ஜனநாயகத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் சர்வதேசத்தின் தலையீடுகள் கட்டாயமாக தேவைப்படுகின்றன. சர்வதேசத் தலையீட்டால் மாத்திரமே வடக்கிற்கு நிரந்தரமானதொரு தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும் வடக்கில் குவிக்கப்பட்டுள்ள இராணுவ படையினரை உடனயாக வெளியேற்ற வேண்டுமென்பதே எமது முக்கிய கோரிக்கை. நாம் பலதடவைகள் இது தொடர்பாக அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தைகளை நடத்தியும் அரசாங்கம் செவிடுமக்காது தான் தோன்றித் தனமாகவே செயற்பட்டு வருகின்றது.
யுத்தம் முடிவடைந்து நான்கு ஆண்டுகளை கடக்கின்ற நிலையில் இன்னமும் தமிழர்களை அடக்கி யுத்த பயத்தினை தமிழர்கள் மனதில் நீங்காது வைத்திஇருக்கும் செயற்பாட்டிலேயே வடமாகாண ஆளுநரும் அரசாங்கமும் செயற்படுகின்றன என்பது தெட்டத்தெளிவாக தெரிகின்றது.
ஆகவே, இனிமேலாவது எமது தமிழ் மக்களை சுதந்திரமாக செயற்படுவதற்கு இடமளித்து அவர்களுக்கான வாய்ப்புகள் வழங்க வேண்டும். நாம் தீவிரவாத செயற்பாடுகளிலேயோ அல்லது மீண்டுமொரு யுத்தத்தினை எதிர்பார்த்தோ அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுக்கவில்லை. நாம் எப்போதும் அரசியல் ரீதியான தீர்வு ஒன்றினையே எதிர்பார்க்கின்றோம்.
எனவே, இலங்க்கான ஜப்பானிய விசேட தூதுவர் யசூஷி அகாஷியுடனான இந்த நீண்டநேர சந்திப்பில் சிறுபான்மை மக்களின் நிலைபற்றியும் வடக்கின் இன்றைய தேவைபற்றியும் பல விடயங்களை கலந்துரையாடி உள்ளோம். எமது நிலைப்பாட்டில் நாம் உறுதியாகவுள்ளோம் என்பதை அவரிடம் தெரிவித்துள்ளோம்.
ஆகவே, எமது தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியிலான நல்லதொரு தீர்வினை பெற்றுக் கொடுத்து வடமாகாணத்தை இராணுவ தலையீடுகள் இன்றி மாகாண சபைகள் ஊடாக இயங்கவைக்க வேண்டிய அனைத்து அதிகார த்தையும் அரசு தலையீடுகளின்றி வழங்க வேண்டும் எனவும், தெரிவித்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.
திருக்கோவில் மேய்ச்சல் தரை உண்ணாவிரதம் முடிவு! தீர்வு பெற்றுத் தரப்படும் என்று உறுதியளிப்பு!
திருக்கோவில், வட்டமடு மேச்சல்தரை பிரச்சினை தொடர்பாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவந்த கால்நடையாளர்கள் தங்களுடைய உண்ணாவிரத போராட்டத்தை நிறைவுசெய்துள்ளனர்.
வன பாலனசபை அமைச்சின் செயலாளர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபரின் உறுதிமொழிகளை அடுத்து தமது உண்ணாவிரதப் போரட்டத்தை நேற்று இரவு 8.00 மணியுடன் முடிவுக்கு கொண்டுவந்ததாக கால்நடையாளர் சங்கத்தலைவர் அழகையா முருகன் தெரிவித்தார்.
வனபரிபாலன சபையின் அமைச்சின் செயலாளர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் அல்விஸ் டி சில்லா நேற்றை முன் தினமும் நேற்று மாலையிலும் தொலைபேசி ஊடாக உண்ணாவிரதத்தை கைவிடுமாறும் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படும் என்றும் உறுதிமொழி வழங்கினர்.
அத்துடன் கச்சேரியில் இன்று புதன்கிழமை பகல் 2.00 மணிக்கு விவசாயிகள் மற்றும் கால்நடையாளர்களுடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு பெற்றுத்தரப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்தனர்.
இந்த கலந்துரையாடலின் போது கால் நடையாளர்களுக்கு பாதகமான நிலை ஏற்பட்டால் கால்நடையாளர்கள் தமது உண்ணாவிரதப்போராட்டத்தை தொடர்ந்து மேற்கொள்வர் என்றும் அவர் தெரிவித்தார்.
அவர்களின் உறுதிமொழிகளை அடுத்தே உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவந்ததாக அவர் தெரிவித்தார்.
சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ மைதானத்துக்கான கடனை செலுத்த முடியாதுள்ளது! அரசாங்கம் நாட்டு விவசாயிகளை உதாசீனம் செய்துள்ளது!: ஐ.தே.க
ஹம்பாந்தோட்டை சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானம் பெரும் எதிர்ப்பார்ப்புடன் அமைக்கப்பட்ட போதும், அதில் இருந்து பெறப்படும் வருமானம் ஆகக்குறைந்த மட்டத்திலேயே உள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இந்தக்குற்றச்சாட்டை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.
700 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டது.
47 ஏக்கரில் நிர்மாணிக்கப்பட்ட இந்த மைதானத்தில் 32 பார்வையாளர்கள் இருக்கைகள் உள்ளன.
இந்தநிலையில் இந்த மைதானத்தை அமைப்பதற்காக பெற்றுக்கொள்ளப்பட்ட கடனில் 2015 இறுதிவரை 8 மில்லியன் டொலர்களை செலுத்தவேண்டியுள்ளன.
2006 ஆம் ஆண்டு உலக கிண்ண போட்டிகளுக்காக பல்வேறு தரப்பினரிடம் இருந்து பெறப்பட்ட கடன்கள் மூலம் இந்த மைதானம் அமைக்கப்பட்டது.எனினும் இதுவரை அங்கு 6 கிரிக்கட் போட்டிகள் மாத்திரமே நடத்தப்பட்டுள்ளன என்று ரவி கருணாநாயக்க சுட்டிக்காட்டினார்.
2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் மாத்திரம் இந்த மைதானத்துக்காக பெற்ற கடனுக்காக வட்டியாக மாத்திரம் 544.953 டொலர்கள் செலுத்தப்படடுள்ளதாக ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார்.
இதேவேளை ஹம்பாந்தோடையில் அமைக்கப்பட்ட மத்தள ராஜபக்ச விமான நிலையம், ஹம்பாந்தோட்டை ராஜபக்ச துறைமுகம் என்பனவும் நட்டத்தில் இயங்கும் அமைப்புக்களாக உள்ளன என்று ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
அரசாங்கம் நாட்டு விவசாயிகளை உதாசீனம் செய்துள்ளது: ஐ.தே.க
அரசாங்கம் நாட்டு விவசாயிகளை உதாசீனம் செய்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
வரவு செலவுத் திட்டத்தில் விவசாயிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகை போதுமானதல்ல என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
நாய்களுக்கான உணவு வகைகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனினும், கழுதைகளுக்கான உணவு வகைகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படவில்லை.
நாட்டின் விவசாயிகள் பாரியளவில் வறுமையை எதிர்நோக்கி வருகின்றனர். நாட்டை அரசியில் தன்னிறைவு அடையச் செய்தது ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமேயாகும்.
இந்த அரசாங்கம் விவசாயிகளிடமும் கடன் பெற்றுக்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்கப்படவில்லை என மத்தும பண்டார குற்றம் சுமத்தியுள்ளார்.
பதவி விலகுவதாக மூன்று முறை சந்தர்ப்பங்களில் கூறினேன் எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை: பிரதமர்
மூன்று சந்தர்ப்பங்களில் தான் பதவியை ராஜினாமா செய்வதாக கூறிய போதும் அதற்கு இடமளிக்கப்படவில்லை என பிரதமர் டி.எம். ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
மகரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சாதாரண மக்களுக்காக சிறையில் தண்டனை அனுபவித்துள்ளேன். இலஞ்சம் பெற்று, ஊழல் செய்து பணம் சம்பாதித்தேன் என்று என்னை எவராலும் கூறமுடியாது.
நான் ஒருபோதும் அப்படி செய்தவன் அல்ல. மோசடிகளை செய்து நான் பணம் சம்பாதிக்கவில்லை. நான் மூன்று முறை பிரதமர் பதவியை விட்டுக்கொடுத்துள்ளேன் என்றார்.
மகிந்த முதலாளித்துவத்தின் கையாள், அவரால் எதனையும் செய்ய முடியாது: விக்ரமபாகு கருணாரட்ன
தேசியப் பிரச்சினைக்கும் முதலாளித்துவத்திற்கும் வழங்க போகும் தீர்வு என்ன என்பதை முழு உலகத்தினரும் பார்த்து கொண்டிருப்பதாக நவசமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பு ரயில் சமூக நிறுவனத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அவர் இதனை கூறினார்.
கிராம, விவசாயிகளின் பிரச்சினை, இரசாயன பசளை போன்ற பிரச்சிரனகளுக்கு என்ன தீர்வு வழங்கப்பட போகிறது என்பதை எதிர்பார்த்து காத்துள்ளோம். இது குறித்து அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்.
மகிந்த ராஜபக்ஷ போன்ற முதலாளித்துத்தின் கையாளுக்கு எதனையும் செய்ய முடியாது. சகல இடங்களிலும் கொங்கிரீட் போட்டு அபிவிருத்தி என காண்பித்து பணத்தை கொள்ளையிட்டு வருகின்றனர். இதனால் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்பட போவதில்லை எனவும் விக்ரமபாகு குறிப்பிட்டுள்ளார்.